11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.. திமுக வக்கீல் சரவணன்
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது என திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது என திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்; 18-ஆம் தேதி அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர்.

இந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தம் அளிப்பதாக திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் அவர் கூறினார். சபாநாயகர் இந்த வழக்கில் ஆஜராகவில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் அதிகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications