ஆட்டோ கட்டண நிர்ணயம்: 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
ஆட்டோ கட்டணத்தை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தைத் மாற்றி அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் லோகநாதன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆட்டோ மீட்டர் தொடர்பான நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்களை ஆட்டோக்களில் எழுதி வைக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளித்தால், குறுஞ்செய்தி மூலம் பதிலளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று மாற்றி அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஆட்டோ கட்டணத்தை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-இல் கடைசியாக ஆட்டோ கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இரண்டு ஆண்டு கால அவகாசம் முடிந்து விட்டதால், கட்டணங்களை உயர்த்தியோ, குறைத்தோ மாற்றியமைப்பது குறித்து அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications