திமுக, பாமக வழக்கு... உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க தடையில்லை- ஹைகோர்ட்
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க தடை ஏதும் இல்லை என திமுக, பாமக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தமாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தத் தேர்தலை, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்து நடத்த வேண்டும் என்றும், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக, பாமக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், முரளிதரன் ஆகியோர் முன்பு விசாரணையில் உள்ளது. கடந்த மாதம் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறைச் செயலாளர் இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், '2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்ய முடியாது. அதற்கு போதிய கால அவகாசம் இல்லை. எனவே, 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் வருகிற அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அதேநேரம், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் வாதம் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ஆஜராக இருப்பதாகவும், எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி வாதிட்டார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதனால், திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், 'இந்த வழக்கை வருகிற 8-ந்தேதிக்கு தள்ளிவைப்பதில் ஆட்சேபனை இல்லை. அதுவரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது. இந்த தேர்தல் அறிவிப்பை வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க முடியாது. வேண்டுமென்றால் மனுதாரர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரை அணுகலாம்" என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications