சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சேகர் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஓபிஎஸ் கூட்டாளியான சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர்ரெட்டி, பிரேம்குமார், ஸ்ரீனிவாசலூ ஆகியோரின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை தியாகராயர் நகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்த இவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது, ஏராளமான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்கள், கட்டிக்கட்டியாக தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் இவரது கூட்டாளிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

சிபிஐ வழக்கு
இதனைத் தொடர்ந்து சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சேகர் ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் சிபிஐ போலீசார் மற்றும் மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நிபந்தனை ஜாமீன்
அவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை மார்ச் 17-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

மீண்டும் கைது
இதனைத் தொடர்ந்து சேகர் ரெட்டியை சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் விசாரிப்பதற்காக அமலாக்கப்பிரிவு போலீசார் மார்ச் 20ம் தேதி கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மனு தள்ளுபடி
இந்த நிலையில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications