தனியார் நிறுவன பால் மாதிரிகளை ஆய்வு செய்ய அமைச்சருக்கு ராஜேந்திர பாலாஜிக்கு ஹைகோர்ட் அதிரடி தடை!
தனியார் நிறுவனங்களின் பால் பொருட்கள் உற்பத்தியில் தலையிடவும், மாதிரிகளை ஆய்வு செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை : தனியார் நிறுவனங்களின் பால் மாதிரிகளை ஆய்வு செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த மாதம் தனியார் நிறுவனப் பாலில் ரசாயன கலப்படம் செய்யப்படுவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் ஹட்சன் மற்றும் விஜய் டைரிஸ் பால் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் இது குறித்து கருத்துகளை தெரிவிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் முன் வைக்கக் கூடாது என்று கூறி அவரது வாய்க்குப் பூட்டு போட்டது. இந்நிலையில் தங்களது டீலர்களிடம் சட்ட விரோதமாக பால் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவதாக கூறி ஹாட்சன் மற்றும் விஜய் பால் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அந்த மனுக்களில் பால் பரிசோதனையை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மட்டுமே நடத்த முடியும். மாநில அரசு பரிசோதனை செய்ய முடியாது.எனவே தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல்,விற்பனை, மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி போன்ற தங்கள் தொழில் நடவடிக்கை களில் தலையிட தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். பால் மாதிரிகளை எடுத்து சோதிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி மனுதாக்கல் செய்த இரண்டு நிறுவனங்களின் தொழில் நடவடிக்கைகளில் தலையிடவும், பால் மாதிரிகளை எடுத்து சோதனை நடத்தவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவிற்கு தமிழக அரசு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications