எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடி!
தினகரன் ஆதரவு எம்எல்எக்கள் 18 பேரின் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து ஹைகோர்ட் கிளையில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மதுரை : 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அளித்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி ஹைகோர்ட் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே. கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக பல்வேறு மாற்றங்கள் நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கக் கோரியும், இந்திய தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு மதுரைக்கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஏற்கனவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் புதிதாக ஒரு பொதுநல மனுவை விசாரிப்பது தேவையற்றது என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.