சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு.. இந்து முன்னணியினர் போராட்டம்.. குண்டுகட்டாக கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்: நவராத்திரி திருவிழாவிற்கு சதுரகிரி கோவிலுக்கு பக்கர்களை அனுமதிக்க கோரி தாணிப்பாறையில் நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை காவல் துறையினர் குண்டுகட்டாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். இத்திருக்கோவிலுக்கு மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

நவராத்திரி தினங்களில் சதுரகிரி மலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் ஏலூர் சாலிய சமூகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.
இந்த வருடத்திற்கான உற்சவம் கடந்த 15 ஆம் தேதி ஆரம்பித்த நிலையில் ஏழுர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் 10 நாட்களும் நவராத்திரியை முன்னிட்டு மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் வனத்துறை நிர்வாகம் சார்பில் நவராத்திரி கடைசி மூன்று தினங்களான 22, 23, 24, ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் மலையேர அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த அனுமதிக்கப்பட்ட நாட்களில் மலையில் தங்க அனுமதி கோரி வனத்துறையிடம் ஏழுர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு வனத்துறை அனுமதி மறுத்த நிலையில் ஏழூர் சாலியர் சமூகத்தின் சார்பில் தலைவர் சடையாண்டி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்ற விசாரனையில் நிலுவையில் உள்ளது.இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலர் திலீப்குமார் ஆஜராகி சதுரகிரி மலைப்பகுதி என்பது பாதுகாக்கப்பட்ட புலிகள் வன பகுதியாக உள்ளதால் அனுமதி தர முடியாது என தெரிவித்தார்.
இந்நிலையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மற்றும் அனுமதி கொடுப்பது தொடர்பாக மதுரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இரு தினங்களுக்கு முன்பு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் மலைக்கோவிலுக்கு செல்லு மூன்று பாதைகள் உள்ளன. மூன்று பாதைகளிலும் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, உரிய அனுமதி இல்லாத கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும். ஒரு பிரிவினருக்கு கோவிலில் தங்க அனுமதி கொடுத்தால் மற்றவர்களும் நீதிமன்றத்தை அணுகுவார்கள். இதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம். அந்த முடிவை வனத்துறை தான் எடுக்க வேண்டும். இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
இதனால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மூன்று நாட்களை மாவட்ட வனத்துறை நிர்வாகம் ரத்து செய்து தற்போது உத்தரவு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்த அனுமதிக்கப்பட்ட நாளான இன்று சதுரகிரி வந்த பக்தர்கள் வத்திராயிருப்பு, மாவூத்து விலக்கு ஆகிய பகுதிகளில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் சதுரகிரி அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி நிலுவையில் உள்ள நிலையில் தற்போது வனத்துறை நிர்வாகம் திடீரென இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தவித்து போயினர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க கோரி இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமையில் அந்த அமைப்பினர் சதுரகிரி கோவில் நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications