கோவிலுக்கு மாலை அணிந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு: பள்ளியை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்கு மாலை அணிந்த மாணவியை பள்ளியில் அனுமதிக்கவில்லை என்று இந்து முன்னணியினர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் ஸ்வீட்லி. நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழாவை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்.

அம்மாணவியை வகுப்பு ஆசிரியர் ஜடா, தலைமை ஆசிரியை சந்திரவதனா ஆகியோர் கோவில் விழாவுக்கு சென்று வந்தபின் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் அதுவரை பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி தனது குடும்பத்தார் மற்றும் இந்து முன்னணியின் துணை தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்று தாசில்தாரிடம் புகார் அளித்தார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியை மாலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் இந்து முன்னணி அமைப்பின் துணை தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாசில்தார் வெங்கடாசலம், சாத்தான்குளம் டிஎஸ்பி கனகராஜ் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினர். இதில் மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு வரலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications