நீங்கள் அத்தனைப் பேரும் உத்தமர்தானா?
இந்துத்துவா வெறியர்கள் எல்லாம் சசிகலாவை பெரிய கொடூரியாக சித்தரித்து கோபமும், அறச்சீற்றமும் கொள்கிறார். பாஜககாரர்கள் எல்லாம் நீதி கிடைத்துவிட்டதென உணர்ச்சிவசப்படுகிறார்கள். சாதிவெறி, மதவெறி, பெண்ணடிமைத்தனம், வர்க்கபேதம், உணவுப்பிரிவினை, வன்கொடுமை என ஆயிரம் மனித உரிமைசார் குற்றங்கள் இருக்கும் இந்த நாட்டில் ஊழல் போன்ற பொருளாதார குற்றங்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றாலும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அதற்கு நான் கடைசி இடமே கொடுப்பேன்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மகிழ்ச்சியாக உணர்ந்தேன் என டிவீட் செய்த பத்ரி சேஷாத்ரி ஊழலுக்கு எதிராக பொங்குவது கொலைக்கு அதரவளித்தவர் திருட்டை எதிர்ப்பதை போன்றது. பாபர் மசூதியை இடித்துவிட்டு அத்வானி வெளியில்தான் உலாத்துகிறார். தன் சொந்த மாநில மக்களின் மரணத்தையும், வாழ்வழிவையும் அமைதியாக வேடிக்கை பார்த்த மோடி, இதோ பிரதமராக இருக்கிறார். கருப்புப் பண அழிப்பு என்ற பெயரில் அத்தனை பேரை பலிகொடுத்த மோடி, எத்தனை லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டார் என எந்த தகவலும் இல்லை. கேட்கவும் நாதி இல்லை.
ஓ.பி.எஸ் என்ன பரிசுத்த ஆத்மாவா? தன் பினாமி சேகர் ரெட்டி பிடிபட்டவுடன்தானே அணி மாறினார்! மெரினா தியான நாடகத்துக்கு நான்கு நாட்கள் முன்பு கூட முதல்வராக இருந்துகொண்டு சசிகலா காலில் விழுந்தாரே!
நம் பிரச்சினை, முதல் நாள், முதல் நாள் நிகழ்வுகளை அலசுவது. இரண்டாம் நாள் முதல் நாள் நிகழ்வுகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு இரண்டாம் நாள் நிகழ்வுகளை மட்டும் அலசுவது. அதனால்தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களை சாவடி அடித்த ஓ.பி.எஸ்சை, சசிகலா காலைப் பிடிக்க பாய்ந்த ஓ.பி.எஸ்சை திடீரென ஒரு நாள் நிகழ்வில் நம்மால் ஹீரோவாக தூக்கி வைத்து சிலாகிக்க முடிகிறது. நம் மறதிதான் இந்த பச்சோந்திகளின் முதலீடே!
அரசியலில் சமரசங்கள் இயல்புதான். ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின், ராமதாஸ், திருமா, இடதுசாரிகள் என எல்லோர் சமரசத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஓ.பி.எஸ் -பிஜேபி மறைமுக சமரசம் இருக்கிறதே அது பச்சோந்திகளின் கூடாரம். சட்டத்தையே பலிகொடுத்து இந்த கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். எந்த தனிமனிதனை விடவும் சட்டம் பெரிது என்பார்கள். அந்த சட்டத்தை ஏதோ தனியார் பள்ளி ரூல்புக் போல தன் கைப்பாவை ஓ.பி.எஸ்க்காக மீறிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு அவர்களது ஏஜென்டாகவே மாறிவிட்ட ஆளுநரும்.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் எதிரிக்கு எதிராக சட்டம் மீறப்படும்போது அமைதி காத்தீர்கள் என்றால் நாளை உங்களுக்கும் அதே கதிதான். ஊழலை விடவும் பன்மடங்கு மக்கள் விரோத செயல்களைச் செய்த, செய்யவல்ல ஒரு மக்கள் விரோத கும்பலாக மத்திய அரசும், ஓ.பி.எஸ் கூட்டணியும் உருவாகிக் கொண்டிருக்கிறது. எந்த வகையில் ஒப்பிட்டுப் பார்த்தாலும் ஜெவும் சசியும் இந்த விஷக் கூட்டணியை விடவும் மோசமானவர்கள் அல்லர்.
காளான் போல முளைவிட்டிருக்கும் இவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது தமிழகத்தின் மேல் அக்கறை கொண்ட நம் ஒவ்வொருவரின் கடமை.
-டான் அசோக்