அதிமுகவுக்கு இந்துத்துவாவாதிகள் ஆதரவு தெரிவிப்பது ஏன்? போட்டு உடைத்த 'பொர்க்கி' சாமி
தமிழ்நாட்டில் பாஜக வளரும் வரை, அதிமுகவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி இன்று தன் ட்விட்ட கணக்கில், பாஜக தமிழ்நாட்டில் வளரும்வரை அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சுப்ரமணியன் சுவாமி கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவு தரும் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். இந்நிலையில், தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த நடிகர் கமல் ஹாஸனை 'முட்டாள்' என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்தார். அதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 'பொறுக்கிகள்' என குறிப்பிட்டார்.
இன்று, சுப்ரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில், திமுகவுக்கு மாற்றாக பாஜக இருக்க வேண்டும். அப்படி சூழ்நிலை ஏற்படும்வரை இந்துத்துவா போராளிகள் அதிமுகவைத்தான் வேறுவழியின்றி ஆதரித்தாக வேண்டும். அதற்கு முன்பாக பாஜக தன்னை மறுசீரமைப்பு செய்தாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
As along as BJP is not the alternative to DMK in TN we Hindutva fighters have no choice but to support ADMK. But BJP needs renovation first
— Subramanian Swamy (@Swamy39) February 22, 2017
தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக வழியாக பாஜக தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறது என்று பல தரப்பினரும் கூறிவருவதை, சுவாமியின் இந்த ட்வீட் உறுதி செய்வது போல் இருக்கிறது.
ஆனால், இதுமாதிரியான கருத்துகள் அதிமுகவை அழிப்பதற்காகத் தொடுக்கப்படும் அம்புகள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.