தமிழ் டி.வி. விவாத நிகழ்ச்சிகளால் வலுவாக ஆதாயமடையும் வலதுசாரி இந்துத்துவா சக்திகள்...
-மனுஷ்யபுத்திரன்
ஜனநாயகம்- சமூக நீதி. மனித நீதி சார்ந்த ஒரு சிவில் சமூகத்தின் ஒரு குடிமகனாக நீண்ட காலம் எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். இன்று வகுப்புவாதத்தின் துர் நிழல் இந்திய சமூகத்தை வெகு தீவிரமாக ஆக்ரமித்து வரும் சூழலில் நம்முடைய எதிர்ப்பின் வடிவங்கள் குறித்து மிகக் கடுமையான கேள்விகள் எனக்கு எழுகின்றன.
செய்தி ஊடகங்களில் ஜனநாயக சமூகநீதி சார்ந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்கு 2010க்கு பிறகு 24 மணி நேர செய்திச் சேனல்களின் வளர்ச்சியால் வாய்ப்புகள் உருவானபோது உற்சாகம் அடைந்தவர்களில் நானும் ஒருவன். அந்த ஊடகங்களில் நானும் ஒரு சிறிய பங்களிப்பை செய்திருக்கிறேன்...

ஆனால் ஜனநாயக சக்திகளின் பங்கேற்பு ஜனநாயக சக்திகள் வலுப்பெற உதவியதா அல்லது பிற்போக்கு மதவாத சக்திகள் வலுப்பெற உதவியதா என்றகேள்வியை நாம் எழுப்பிக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க என்ற கட்சி செய்தி தொலைகாட்சிகளின் வழியாகவே வளர்ந்த ஒரு கட்சி. அவர்கள் வகுப்புவாத முரண்பாடுகளை மிகக் கூர்மைமையாக வெகுசன தளத்திற்கு கொண்டு சென்றார்கள். ஆர்.எஸ்.எஸ், இந்து முண்ணனி இன்னும் பல குட்டிக் குட்டி இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இலட்சக்கணக்கான மக்களிடம் பேசும் வாய்ப்பை இந்த ஊடகங்களில் பெற்றார்கள்.
இதில் சாதி வெறியூட்டும் பேசுக்களை பேசுகிறவர்களும் இணந்துகொண்டார்கள். தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் கடந்த 5 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட இந்துத்துவா நட்சத்திர பேச்சாளர்களை உருவாக்கியிருக்கிறன.
அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் எல்லாம் பொதுவெளியில் அவர்கள் கற்பனையே செய்திராத வாய்ப்புகளை பெற்றார்கள். நடுநிலையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், மோடி ஆதரவாளர்கள் என்று பல போர்வைகளில் ஏராளமான இந்துத்வா சக்திகள் உள்ளே வந்தார்கள்.
இதற்கு மாற்றாக அரசியல் கட்சிகளில் இருந்து தலா நான்கு பேர், முற்போக்கு ஜனநாயக எண்ணம் கொண்டவர்கள் நான்கு பேர் என ஒரு சிறிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இந்து முண்ணணி, சிவசேனா போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைக்கப்படுகிறபோது ஏன் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர இளைஞர் முண்ணனி போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அவர்களோடு விவாதத்திற்கு அழைக்கப்படுவதில்லை என்ற கேள்வியை பல ஊடகங்களிடம் எழுப்பியிருக்கிறேன்.
இது சமநிலையற்ற ஒரு விளையாட்டு. செய்தி ஊடகங்களின் வழியாக வெறுப்புப் பிரச்சாரம் கடந்த நான்காண்டுகளில் மிகக் கடுமையாக நடந்திருக்கிறது. ஏற்கனவே மதரீதியான உணர்வுகளில் ஊறிப்போன ஒரு வெகுசன திரளில் இந்த வெறுப்பு பிரச்சாரங்கள் ஒரு நெருப்பைபோல பரவிவருகின்றன.
இவர்களுக்கு எதிரான முற்போக்கு ஜனநாயக சக்திகள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து எவ்வளவுதான் போராடினாலும் மதவாத சக்திகள் தங்கள் நோக்கங்களை தந்திரமாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் அடையாள அரசில் என்ற கருவியை வெகு சாதுர்யமகா சுழற்றுகிறார்கள்.
குஜராத் படுகொலையைப் பற்றி ஜனநாயக சக்திகள் கேட்டால் 'கோத்ராவில் கரசேவர்களை எரித்தது நியாயமா?" என்று கேட்பார்கள்.
இரண்டும் அடிப்படையில் வேறு நிகழ்வுகள் என்பதையும் கோத்ரா ரயில் எரிப்பு குஜராத் படுகொலையைப் போலவே மன்னிக்க முடியாத ஒன்று என்பதையும் விளக்குவதற்குள் "முஸ்லீம்கள் இந்துக்களை கொன்றால் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள், ஆனால் இந்துக்கள் முஸ்லீம்களைக் கொன்றால் மட்டும் கவலைப்படுவார்கள்" என்று குஜராத் படுகொலையாளர்களை நியாப்படுத்துகிறவொரு உளவியலை பார்வையாளர்களிடம் வெகு சுலபமாக கட்டமைத்து விடுவார்கள்.
"பசுவைக் கொல்வர்களை கொல்வோம்' என்று பேசுகிறவர்களை எதிர்த்து ஜனநாயக சக்திகள் பேசும்போது ‘'மாட்டை தின்பது எங்கள் உரிமை" என்று நம்மை பேசவைப்பார்கள். ஆனால் வெகுசன உளவியலில் முற்போக்காளர்கள் இந்துக்களின் உணர்வுகளை அவமானப்படுத்துகிறவர்கள் என்கிற செய்தியை அவர்கள் அதன்மூலம் கொண்டு சேர்ப்பாளர்கள்.
ஊடக விவாதங்களின் வழியாக இந்துத்வா அமைப்புகள் பிரபல்யம் அடைந்திருக்கின்றன. அவர்களது நோக்கங்கள் பிரபல்யமடைந்திருக்கின்றன.
ஆனால் அதுபோன்ற ஒரு பலன் முற்போக்கு ஜனநாயக இயக்கங்களுக்கு கிடைத்திருக்கிறதா? வகுப்புவாத சக்திகள் ஒரு எதிர்தரப்பை கட்டமைத்து அதன் மூலமாக தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் உத்திக்கு ஜனநாயக சக்திகள் பயன்படுகிறோமா?
நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. வெறியூட்டும் பேச்சுகளைப் பேசுகிற, குறைந்தபட்ச ஜனநாயக பண்போ சமூகப் பண்பாடோ இல்லாத நபர்கள் அமரும் விவாதங்களில் நாம் அவர்களுக்கு இணையாக அமர வேண்டுமா?
அவர்களுக்கு விளம்பரம் தேவை எனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆண்மை லேகியம் விற்பனை செய்யும் மருத்துவர்கள் போல ஸ்லாட் எடுத்து செய்துகொள்ளட்டும். நாம் ஏன் அவர்களின் நோக்கங்களுக்கு பலியாக வேண்டும்?
நாம் கருத்துக்களோடு விவாதிக்க முடியும். வெறுப்போடும் வன்முறையோடும் விவாதிக்க இயலாது. வெறுப்பும் வன்முறையும் கருத்துக்களை தந்திரமாக வென்றுவிடும்.
சட்டப்படி தடைசெய்யப்பட வேண்டிய அமைப்புகளோடு அமர்ந்து விவாதம் என்ற பெயரில் அவர்களை ஒரு கருத்தியல்தரப்பாக உயர்த்தும் வேலையை நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு செய்யப்போகிறோம்? .
அவர்கள் இந்த ஊடகங்களின் வழியே காற்றில் விஷக்கிருமிபோல பரவிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ஏன் அந்தக் கிருமிகளோடு விவாதித்து விவாதித்து உருப்பெருக்கம் செய்ய வேண்டும்?
நாம் முதலில் விவாதிக்க வேண்டியது இதுதான்.












Click it and Unblock the Notifications