ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்த குஷ்பு…: புது வழக்கு போட்ட இந்து மக்கள் கட்சி
சென்னை: ருத்ராட்ச மாலையில் நடிகை குஷ்பு தாலி கோர்த்து அணிந்துள்ளதாக எழுந்துள்ள புகாரையடுத்து, இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி செயலாளர் பாலா. கும்பகோணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "வார இதழ் ஒன்றில் நடிகை குஷ்பு தாலியில் ருத்ராட்ச கொட்டை கோர்த்து அணிந்திருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது.
இது இந்து மதத்திற்கு எதிரானது. மேலும் இந்து மதத்தை புண்படுத்துவது போல் அமைந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கு தொடர்ந்த பாலாவிடம் கேட்ட போது, "இந்த விவகாரம் தொடர்பாக மடாதிபதிகள், ஆதீன கர்த்தர்கள், இந்து மத தலைவர்களிடம் கருத்து கேட்டேன்.
அவர்கள் இது தவறான செயல் என தெரிவித்தனர். அதன் பின்னர்தான் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
பிளாஸ்டிக் தாலி
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை குஷ்புவின் கணவரும், டைரக்டர் கம் நடிகருமான சுந்தர் சி நடித்த நகரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது குஷ்பு இந்த ருத்ராட்ச மாலை தாலியை அணிந்திருந்தார். அந்த விழாவில் அப்போதய முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தாலி மேல் கண்
அரசியல் கட்சியினர் பிரபலங்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்திழுத்தது நடிகை குஷ்புவும் அவர் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையும் பிளாஸ்டிக் தாலியும்தான்.
அப்போதே சர்ச்சைதான்
பேஷன் என்ற பெயரில் அவர் ருத்திராட்ச மாலையுடன், பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரை முகம் சுழிக்க வைத்தது.
செருப்பு போட்ட குஷ்பு
சில ஆண்டுகளுக்கு முன் சினிமா விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பு நடிகை குஷ்பு செருப்பு அணிந்தபடி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கடுமையாக கண்டித்தன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குஷ்பு.
கற்பு விசயத்தில்
தமிழ் பெண்கள் கற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில் சிக்கிய குஷ்பு சுப்ரீம்கோர்ட் வரை சென்று மீண்டுவந்தார்.
கடவுள் படங்கள் சேலை
கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்றார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்துக் கடவுள் படங்கள் இருந்தன. இதனையடுத்து குஷ்புக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டத்தை அறிவித்தனர்.
மீண்டும் தாலி மேட்டர்
இந்த நிலையில் இப்போது ருத்ராட்ச மாலை தாலி மேட்டரை கையில் எடுத்துள்ளனர் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள். குஷ்பு சும்மா இருந்தாலும் கேஸ் போட்டு கேஸ் போட்டே பெரிய ஆள் ஆக்கிவிடுவார்கள் போல.