சென்னை ஹைகோர்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம பார்சல், கடிதம் கண்டெடுப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று அதிகாலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையில் கடிகாரமும், மர்மகடிதமும் கண்டெடுக்கப்பட்டது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 3 மணி அளவில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து, மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது குடும்ப நல நீதிமன்றம் அருகே பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் கடிகாரம், கடிதம் ஒன்று இருந்தது.
நீதித்துறையில் லஞ்ச, ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் எழுதப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், 2வது முறையாக தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications