கனமழை எதிரொலி: வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கோவை: தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் கடந்த ஒரு சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாவில் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளுக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அமைந்துள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் புதன்கிழமை இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ( பொறுப்பு ) கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ளார்