அண்ணாசாலை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை: 2014 முதல் செயல்படும்
சென்னை: சென்னை புதிய தலைமை செயலக கட்டடத்தை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக்கும் பணிகள் டிசம்பருக்குள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை 2014ம் ஆண்டுமுதல் நோயாளிகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டடத்தை ரூ.26.92 கோடி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 தளங்களை கொண்டுள்ளது. இதன் தரைத் தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, நோய் கண்டறியும் பிரிவு, சி.டி.ஸ்கேன் மையம், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம், ஜெனரேட்டர் அறையும், முதல் தளத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, நோய் கண்டறியும் பிரிவு, பரிசோதனை கூடம், அவசர சிகிச்சை, சிறிய ஆபரேஷன் தியேட்டர் போன்றவை அமைய உள்ளன.
இதே போன்று 2-வது தளத்தில் மருத்துவமனை நிர்வாக அமைப்பு, நோய் கண்டறியும் பிரிவு, பரிசோதனை கூடங்கள் இடம் பெற உள்ளன. 3-வது மற்றும் 4-வது தளத்தில் பொது வார்டுகளும், 5-வது மற்றும் 6-வது தளங்களில் சிறப்பு வார்டுகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர்கள் அமைய உள்ளன.
இதற்கான பணிகள் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் 65 சதவீதம் முடிக்கப்பட்டிருந்தன. தற்போது, 3-வது மற்றும் 4-வது தளத்தில் பொது வார்டுகள் அமைக்கும் பணி முற்றிலும் முடிவடைந்து உள்ளன. மேலும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளன.
மருத்துவமனையின் முக்கிய அம்சமான ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளன. தற்போது, அறைகளுக்கு தேவையான குளிர்சாதன வசதி பணிகள் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள் பொதுப்பணித்துறையினரின் பணிகளை முடித்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ஒரு தலைமை பொறியாளர், 2 கண்காணிப்பு பொறியாளர்கள், தளத்திற்கு ஒருவர் வீதம் 7 செயற்பொறியாளர்கள், அவர்களுக்கு உதவியாக 7 உதவி செயற் பொறியாளர்கள் மற்றும் 7 உதவி பொறியாளர்கள் கொண்ட பொறியாளர் குழுவினர் இரவு, பகலாக தீவிரமாக பணியாற்றி உரிய நேரத்தில் பணியை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், சாய்தளம் அமைக்கும் பணி மட்டும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் முடிவடையாது என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பணி நிறைவடையும் தருவாயில், டிசம்பர் 1-ந் தேதி முதல் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வரவழைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மருத்துவ உபகரணங்களை பொருத்தும் பணி நடைபெறும்.
இந்த பணி முடிவடைய குறைந்தபட்சம் 1½ மாதங்கள் ஆகும் என்றும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை நோயாளிகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.