ராஜாஜி அரங்கை சுற்றி ஹோட்டல்கள் மூடல்... கையேந்தி பவனில் கை நனைக்கும் விஐபிக்கள்
ராஜாஜி அரங்கை சுற்றி ஹோட்டல்கள் மூடப்பட்டதால் கையேந்தி பவன்களில் கை நனைக்கும் நிலையில் விஐபிக்கள் உள்ளனர்.
சென்னை: ராஜாஜி அரங்கை சுற்றி ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் கையேந்தி பவன்களில் தொண்டர்களும் விஐபிக்களும் வாங்கி உண்ணுகின்றனர்.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் நேற்று மாலை காலமானார்.
இதையடுத்து இன்று ஒரு நாள் தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது.
உடல்வைப்பு
ராஜாஜி அரங்கத்தில் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் இறுதி மரியாதை செலுத்த குவிந்துள்ளனர். மேலும் விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரமுகர்கள் என வந்த வண்ணம் உள்ளனர்.
பாதுகாப்பு கருதி மூடல்
இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ராஜாஜி ஹால், கடற்கரை சாலை, சிவானந்தா சாலை ஆகிய சாலைகளை சுற்றியுள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இது பாதுகாப்பு கருதியும் கடைகள் மூடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
மக்கள் அவதி
இதனால் உணவு , தண்ணீர் பாட்டில், இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். பசிக்கு டீ, காப்பி கடைகள் கூட இல்லாததால் தொண்டர்கள் கடும் இன்னலுக்குள்ளாகினர்.
திடீர் முளைப்பு
இதையடுத்து ராஜாஜி சாலை, சிவானந்தா சாலை, சிந்தாதிரிபேட்டை, கடற்கரை சாலை, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் தற்காலிக உணவு கடைகள் திறக்கப்பட்டன. தக்காளி சாதம் , லெமன் சாதம், தயிர் சாதம் என உணவு பொட்டலங்கள் விற்கப்பட்டன.
கடலை கடை
இதுமட்டுமல்லாமல் தண்ணீர் பாக்கெட்டுகள், டீ. காபி, கடலை, பழங்களின் சாலட், பைனாப்பிள் ஸ்லைஸ் ஆகியவற்றின் விற்பனை ஜரூராக நடந்தது. தண்ணீர் பாட்டிலின் விலை ரூ. 25 முதல் ரூ.30-க்கு விற்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் அவதியடைந்தனர். எனினும் பசியாற்றிக் கொண்டனர்.
கைகொடுத்த கையேந்தி பவன்
தொண்டர்கள் மட்டுமல்லாது கருணாநிதியை சந்திக்க வரும் விஐபிக்கள் முக்கியமாக இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் அளவுக்கு நெருக்கமான விஐபிக்களுக்கும் இந்த கையேந்தி பவன்களில் இருந்தே உணவு வாங்கி வரப்பட்டது. இதனால் இன்று அப்பகுதி மக்களின் கல்லா நிரம்பியது.