பயிற்சி மருத்துவர்கள் 3 வது நாளாக போராட்டம்: நோயாளிகள் பாதிப்பு

குமரி மாவட்டம் விலவங்கோடு ஒற்றாமரத்தை சேர்ந்தவர் பொன்சாம். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கங்கைகொண்டான் அருகே வந்த போது அதே பஸ்சில் பயணம் செய்த 3 பேரின் நகைகளை பொன்சாம் பறித்தார். இது தொடர்பாக கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி பொன்சாமை கைது செய்தனர்.
அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை நடந்தபோது பயிற்சி மருத்துவர் சீனிவாசனை பொன்சாம் தாக்கினார். இதனை தடுக்க முயன்ற மேலும் சில பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து பொன்சாமை போலீசார் பாளை சிறையில் அடைத்தனர். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து மருத்துவர்கள் கடந்த 25ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இது முன்றாவது நாளாக தொடர்ந்தது.
மருத்துவமனை வாளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் பாதுகாப்பு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.
நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் அனுமதி சீட்டு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் மருத்துவமனையில் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. மருத்துவமனை டீன் சவுந்திர ராஜன் மாணவ பிரிதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications