எஸ்.வி.எஸ் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அளித்தது ஏன்? ஜெயலலிதா விளக்கம்
சென்னை: உயர்நீதி மன்றத்தின் ஆணைகளின்படி எஸ்.வி.எஸ். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அனுமதி வழங்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமுதாய சேவை அறக்கட்டளை 'யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்', என்ற பெயரில் கல்லூரி ஒன்றை துவங்கவும், ஆண்டுதோறும் 50 மாணவர்களை சேர்க்கவும், 3.4.2008 அன்று திமுக அரசால் அனுமதி வழங்கப்பட்டது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமுதாய சேவை அறக்கட்டளை 'யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்', என்ற பெயரில் கல்லூரி ஒன்றை துவங்கவும், ஆண்டுதோறும் 50 மாணவர்களை சேர்க்கவும், 3.4.2008 அன்று திமுக அரசால் அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் 26.5.2009 அன்று இக்கல்லூரிக்கு 2008-2009-க்கான தற்காலிக இணைப்பு வழங்கியது.
இதனைத் தொடந்து யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு, 2009-2010-லிருந்து ஆண்டுதோறும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர் தற்காலிக இணைப்பு 2014-2015-ம் ஆண்டு வரை வழங்கி வந்துள்ளது.
2015-2016-ஆம் ஆண்டிற்கு இக்கல்லூரி இணைப்புக்கான அனுமதி கோரியுள்ள விண்ணப்பம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பரிசீலனையில் உள்ளது. இதே அறக்கட்டளைக்கு 50 மாணாக்கர்களுடன் ஒரு ஹோமியோபதி மருத்துவ பட்டப்படிப்பு கல்லூரி தொடங்குவதற்கும் முதற்கட்டமாக 28.2.2011 அன்று தடையில்லா சான்று திமுக அரசால் வழங்கப்பட்டது. ஆனால், இந்த கல்லூரியின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது. உயர்நீதி மன்றத்தில் எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமுதாய சேவை அறக்கட்டளை தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில், இந்த அறக்கட்டளைக்கு 28.9.2015 அன்று மத்திய அரசு புதிய ஹோமியோபதி பட்டப்படிப்பு கல்லூரி தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், உயர்நீதி மன்றத்தின் ஆணைகளின்படி இந்த ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 2014-2015 மற்றும் 2015-2016 ஆண்டுகளுக்கு மாணாக்கர்கள் சேர்க்கைக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் அரசு கல்லூரிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.