மேகி சர்ச்சை: விளம்பரத்தில் நடிப்பவர்கள் மீது பழிபோடுவதா? - குஷ்பு
சென்னை: நெஸ்லே போன்ற ஒரு நிறுவனத்தின் உணவுப்பொருளை உணவு அமைப்பு அங்கீகரித்த பின்பே அது கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் மீது எப்படிப் பழிபோடுவீர்கள்? என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
‘மேகி நூடுல்ஸ்' உணவுப் பொருள் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய பீகார் மாநிலத்தின் முஸாஃபர்பூர் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. வழக்கு விசாரணைக்குத் தேவைப்பட்டால் அமிதாப் பச்சன் உள்ளிட்ட 5 பேரையும் காவல் துறை கைது செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனால் பாலிவுட், கோலிவுட் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடிகர்கள் பலரும் கருத்து கூறியுள்ள நிலையில்,இந்த சர்ச்சை தொடர்பாக நடிகை குஷ்பு டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
|
பிரபலங்கள் மீது வழக்கு
‘நெஸ்லே போன்ற ஒரு நிறுவனத்தின் உணவுப்பொருளை உணவு அமைப்பு அங்கீகரித்த பின்பே அது கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் மீது எப்படிப் பழிபோடுவீர்கள்?
|
சோதனை செய்யமாட்டார்களா?
கடையில் ஒரு பொருள் விற்கப்படுவதற்கு முன்பு அதைச் சோதனை செய்யமாட்டார்களா? அல்லது அதை நாம் தலைகீழாகத்தான் செய்வோமா? முதலில் பொருள் வாங்கப்பட்டு, உடல்நலக் குறைவு ஏற்பட்டபிறகு சோதனை செய்வோமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
|
குஷ்புவுக்கு எதிர்ப்பு
குஷ்புவின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதராவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ராதிகாவுக்குப் பின் குஷ்பு
ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றும் நடிகை ராதிகா, அந்தக் கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில்ரீதியானது மட்டுமே, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இப்போது மேகி நூடுஸ்ல் சர்ச்சை தொடர்பாக நடிகை குஷ்பு ட்வீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.