வெறும் பேச்சால் மக்களை ஏமாற்றும் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்.. இது 2009ல் ராமதாஸ் பேசிய பேச்சு!
வேலூர்: திமுக தலைவர் கருணாநிதி அரசியல் நடத்துவதைப் பார்த்து தான் பாடம் கற்றேன் என்று இன்று பேசியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 2009ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி சனிக்கிழமை வேலூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியவை... அவரது வார்த்தைகளிலேயே!
"தி.மு.க. அரசு இலங்கை தமிழர்களை கைவிட்டு விட்டது. இதனால் பொதுமக்களுக்கு கோபம் அதிகரித்து வருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான அரசு இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய ஏதும் செய்யவில்லை என்ற பெருங்கோபம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த கோப அலை மாநிலம் எங்கும் வீசுகிறது. இது இந்த தேர்தலில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்.
இலங்கை தமிழர்களுக்கு உரிமைகளை பெற்று தரவும் போரை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை தொடங்க செய்யும் அக்கரை உள்ள கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இடம்பெற வேண்டும்.
வெறும் பேச்சால் மட்டும் ஏமாற்றி கொண்டு போகிற தி.மு.க. போன்ற கட்சிகள் தோற்கடிக்கபட வேண்டும் என்ற கருத்து தமிழக மக்களிடையே மேலோங்கி நிற்கிறது. இலங்கை பிரச்சினையில் நாளுக்கொரு செயல், பொழுதுக்கொரு பேச்சு என்று செயல்பட்டு வருபவர் கருணாநிதி.
இலங்கை பிரச்சினையில் கருணாநிதி ஆட்சி செயழிலந்து நிற்கிறது. மின்சாரப்பிரச்சினை ஒன்று போதும் தி.மு.க. அரசை கவிழ்ப்பதற்கு. இதனை ஆற்காடு வீராசாமியே ஒத்துக் கொண்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது.
இலங்கை பிரச்சினையில் நாளுக்கொரு செயல், பொழுதுக்கொரு பேச்சு என்று செயல்பட்டு வருபவர் கருணாநிதி.
தமிழகத்தில் முக்கியப் பிரச்சினைகளை தி.மு.க. அரசு தீர்க்கவில்லை. மத்தியில் இதுவரை இருந்த தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட அனைத்து கூட்டணி
ஆட்சியிலும் முக்கிய கட்சியாக தி.மு.க. இடம்பெற்றது. இந்த கால கட்டத்தில் தி.மு.க. மாநில ஆட்சியிலும் இருந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநிலத்தின் பிரச்சினைகளை தீர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு மற்றும் நதிகள் இணைப்பு போன்ற மாநில பிரச்சினைகளில் தீர்வு ஏற்பட எந்த முயற்சியும் மேற்கொண்டதில்லை.
காவிரி பிரச்சினை கருணாநிதி ஆட்சியில்தான் தொடங்கியது. உரிய நேரத்தில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தால் காவிரி பிரச்சினை நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றுக்கு சென்று தீர்க்கப்படாமல் இழுத்துக் கொண்டே போகும் நிலை ஏற்பட்டிருக்காது.
இந்த பிரச்சினையால் தமிழகத்தில் பெரும் பகுதி வறண்டு விட்டது. நிலத்தடி நீர் வற்றியதற்கு முக்கிய காரணம் இதுதான். மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டு மக்களிடம் இலவசங்களை காட்டி கருணாநிதி ஏமாற்ற முயற்சிக்கிறார்.
தி.மு.க.வின் இது போன்ற பேச்சை மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள். அரசியலில் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லை எல்லா கட்சியினரும் மந்திரமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் பா.ம.க. மட்டும் அணி மாறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இது பற்றி பாம.க.வை விமர்சித்திருக்கிறார். அவர் அணி மாறாதவரா? புதிய கட்சி தொடங்காதவரா? அவரது கட்சி அணி மாறாததா? " என்றார் ராமதாஸ்.