விக்கிரவாண்டி லியா லட்சுமியின் தலைமுடி ஈரமாகலை! உடலில் இருந்து வந்த அந்த வாசம்! பெற்றோர் கண்ணீர்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி மாணவி செப்டிக் டேங்கில் விழுந்து மரணமடைந்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் தனது மகளை ஆசிரியை அடித்ததால்தான் அவர் இறந்தார் என பெற்றோர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் இசேவை மையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் பழனிவேல். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களுக்கு மூன்றரை வயதில் லியா லட்சுமி என்பவர் இருந்தார்.

இந்த குழந்தை விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இவர் கடந்த 3ஆம் தேதி பள்ளிக்குச் சென்றார். அவரை பழனிவேல்தான் பள்ளியில் விட்டுவிட்டு தனது வேலைக்குச் சென்றுவிட்டார்.
பின்னர் குழந்தை லியா லட்சுமி கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என கேட்டதால் அவரை ஆசிரியர் அனுப்பினாராம். ஆனால் லியா லட்சுமி நீண்டநேரமாகியும் வரவில்லை என்பதால் ஆசிரியை போய் தேடி பார்த்த போது அவர் செப்டிக் டேங்கில் விழுந்திருந்ததாக சொல்லப்படுகிறது.
குழந்தை கழிப்பறைக்கு சென்ற போது ஆயம்மா ஒருவர் உடன் செல்லாமல் சென்றது ஏன், குழந்தை செப்டிக் டேங்கில் விழுந்ததும் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காதது ஏன் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
இது தொடர்பாக பள்ளித் தாளாளர், பள்ளி முதல்வர், ஆசிரியை ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து லியா லட்சுமியின் பெற்றோர் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது கூறியிருப்பதாவது: மாணவி இறப்பு விவகாரத்தில் நிறைய விஷயங்கள் மறைக்கப்படுகின்றன.
மாணவியின் யூனிபார்மில் உள்ள ரத்தக் கறையை நாங்கள் கோர்ட்டில் ஒப்படைப்பதாக சொல்லியும் போலீஸ்காரர்கள் வந்து வாங்கிச் சென்றுவிட்டனர். பள்ளியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யவும் எங்களை விடவில்லை.
சிசிடிவி காட்சியில் மதியம் 2.14 மணிக்கு இறந்த குழந்தையை செப்டிக் டேங்க் அருகே ஒருவர் எடுத்து வருவதும் அந்த குழந்தையை காரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் பதிவாகியிருந்தது. ஆனால் பள்ளித் தாளாளர் தரப்பு சொல்வது என்னவெனில் சுமார் 2.30 மணிக்குத்தான் மாணவியை தேடியதாகவும் செப்டிக் டேங்க் அருகே கண்டுபிடித்ததாகவும் சொல்கிறார்கள்.
சிறுமியை முன்னேம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது மாணவியின் தலை முடியில் ஈரம் இல்லை. யூனிபார்மில் ஈரம் இல்லை. செப்டிக் டேங்கில் விழுந்ததற்கான எந்த துர்நாற்றமும் அவருடைய உடலில் இருந்தோ உடையில் இருந்தோ வீசவில்லை, ப்ளீச்சிங் பவுடர் வாசனை மட்டுமே இருந்தது.
எனவே சக மாணவிகளிடம் கேட்ட போது லியா லட்சுமியை ஆசிரியை ஒருவர் அடித்துவிட்டதாகவும் அவரே கொண்டு போய் செப்டிக் டேங்க் அருகே போட்டதாகவும் எங்களிடம் கூறினார் என பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications