ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு தயாரிப்பது எப்படி?- போலீஸாரை உறைய வைத்த கோவை ஆசாமி
ரூ. 2 ஆயிரம் கள்ளநோட்டு தயாரிப்பது எப்படி என்று குறித்து வாக்குமூலம் கொடுத்த போலீஸாரையே உறைய வைத்தார் கோவை ஆசாமி ஒருவர்.
கோவை: கோவையில் இரண்டாயிரம் ரூபாய் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டு குடோன் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ' சுமார் ஒரு கோடி வரையில் கள்ளநோட்டுக்களைப் புழக்கத்தில் விடுவதற்குத் திட்டமிட்டிருந்தனர். கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் கோவை மாநகர போலீஸார்.
செயின் பறிப்பு மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறவர்களைப் பிடிப்பதற்காக, புதிய யுக்தி ஒன்றை கோவை போலீஸார் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, ஒரு இடத்தில் பணிபுரியும் போலீஸார், வாகன சோதனைக்காக வேறு இடத்துக்கு மாற்றப்படுகின்றனர்.
வாகனத் தணிக்கை நிறைவடைந்ததும் அவர்கள் பழையபடி தங்கள் காவல்நிலையத்துக்கே சென்று விடுகின்றனர். அந்த வகையில் நேற்று மாலை 6.30 மணியளவில் தடாகம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார் ரேஸ்கோர்ஸ் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ்.
பாக்கெட் சோதனை
அப்போது அந்த வழியாக டூ வீலரை ஓட்டிக் கொண்டு வந்த வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை சோதனையிட்டனர். அவருடைய செயல்பாடுகள் எல்லாம் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கவே, அவரது பாக்கெட்டை சோதனையிட்டனர்.
சிறப்பான கவனிப்பு
அப்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் அகப்பட்டன. வழக்கமான நோட்டுக்களைவிடவும் இலேசான தடிமனில் இருந்த அந்த நோட்டுக்களைப் பார்த்த இன்ஸ்பெக்டருக்கு சந்தேகம் ஏற்படவே, ஆனந்தை சிறப்பாகக் கவனித்தனர்.
பறிமுதல்
ஒருகட்டத்தில், 'நண்பர்களுடன் சேர்ந்து கள்ள நோட்டு தயாரித்து வருகிறேன். இதுவரை எங்கும் சிக்கியதில்லை' எனக் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், இன்று காலை வேலாண்டிபாளையத்தில் உள்ள ஆனந்தின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கான 2 ஆயிரம் கள்ள நோட்டுக்கள்(5904 நோட்டுக்கள்) பறிமுதல் செய்யப்பட்டன.
ஏமாற்றம்
சாக்கு மூட்டையில் கட்டப்பட்டவாறு ரூபாய் நோட்டுக்கள் இருந்துள்ளன. கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்பட்டு கலர் ஜெராக்ஸில் பிரிண்ட் எடுக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, கோவை மாநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாகக் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளதும் கண்டறியப்பட்டது.
நோட்டடிக்கும் மிஷின் பறிமுதல்
இதையடுத்து, ஆனந்த் மீது 449, 489 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார். ஆனந்தின் கடையில் இருந்து பிரிண்ட்டர், இங்க் பாட்டில், ஜெராக்ஸ் மிஷின், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.