அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஆற்று மணலை கொள்ளையடித்த மாஃபியாக்களுக்கு ஆப்பு! #sandquarry
Recommended Video

சென்னை: மணல் குவாரி தொழில் என்பது தமிழகத்தில் அரசியலுடன் இணைத்து பார்க்கப்படுவதாக உள்ளது. மணல் குவாரி அதிபர்கள் அரசில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்களாகவே இருக்கிறார்கள்.
அனைவருக்குமே தெரிந்த ஒரு உதாரணம், சேகர் ரெட்டி. கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் போயஸ் கார்டன் லாபியில் நெருக்கமான சேகர் ரெட்டி தமிழ்நாட்டில் பல இடங்களில் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்தார். இதன் மூலம் கோடி கோடியாக கொட்டியது.
இப்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வமும், சேகர் ரெட்டியும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஒன்றாக வருவது போன்ற போட்டோக்கள் எதிரணியால் இப்போதும் இணையத்தில் சுழன்று வருகிறது.

சேகர் ரெட்டி
சேகர் ரெட்டியை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என வளைத்து எடுத்து சிறைக்குள் தள்ளியது சமீப காலத்து வரலாறு. இவர் ஒரு உதாரணம் மட்டுமே. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சியாளர்களில் அதிகாரம் படைத்தோரை கைக்குள் போட்டுக்கொள்வது இதுபோன்ற மணல் குவாரி உரிமையாளர்கள் வாடிக்கை.

ஐடி ரெய்டு
இதேபோல சமீபத்தில் சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை மெகா ரெய்டு நடத்தியது. அப்போது, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமிக்கு சொந்தமான 7 இடங்களில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர் வருமான வரித்துறையினர்.

மேற்குமண்டலம்
ஆறுமுகசாமிதான் மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய மணல் ஒப்பந்ததாரர். அரசு மணல் குத்தகைகளை இவர்தான் பெரும்பாலும் எடுத்து மேற்கொள்வார். ஆறுமுகசாமி, சசிகலாவின் ஆதரவாளராக அறியப்படுகிறார்.

ஏரியா பிரித்து அள்ளினர்
இப்படி பெரும் தொழிலதிபர்கள் மண்டலம் மண்டலமாக பிரித்துக்கொண்டு ஆற்று மணலை அள்ளி குவித்தனர். ஆனால் அளவுக்கும் அதிகமாக மணலை சுரண்டி தீர்த்ததால் நிலத்தடி நீர் மட்டம் கீழே போய், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி தமிழகம் பாலைவனமாகும் சூழல் உருவானது. இந்த நிலையில்தான், ஹைகோர்ட் மதுரை கிளை மணல் குவாரிகளுக்கு அதிரடி தடையை விதித்துள்ளது. இது சமூக ஆர்வலர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications