சசிகலாவின் விரல் நுனியில் தமிழக நிகழ்வுகள்.. எப்படி சாத்தியம்?
பெங்களூர் சிறையில் இருந்தவாறே தமிழகத்தில் நடைபெறும அரசியல் சூழல்கள் குறித்து அவ்வப்போது தகவல்களை பெறுவது எப்படி?
சென்னை: தமிழக சட்டசபை அமளி, நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை பெங்களூர் சிறையில் இருந்தவாறே ஆர்வமாக கவனித்து வருகிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் குளிர்சாதன அறை, தொலைக்காட்சிப் பெட்டி, வீட்டுச் சாப்பாடு, மேல்நாட்டு கழிப்பறை உள்ளிட்ட சலுகைகளை சிறைத் துறையினரிடம் கேட்டார்.
எனினும் அதற்கு மறுப்பு தெரிவித்த சிறைத் துறை, சசிகலாவை சாதாரண அறையிலேயே தங்க வைத்துள்ளது. மேலும் தமிழக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரங்களை சிறை அறையில் இருந்தவாறே பார்ப்பதற்காக டிவி வைக்குமாறு சிறப்பு அனுமதி கோரியிருந்த சசிகலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு மறுப்பு தெரிவித்த சிறைத் துறை அதிகாரிகள், சசிகலாவை அடைக்கப்பட்டுள்ள அறையில் அவருக்கென்று சிறப்பு அனுமதியின் பேரில் டிவி வழங்கப்படவில்லை. மேலும் பொதுவாக டிவி வைக்கப்பட்டுள்ள பகுதியில் அமர்ந்து பார்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது என்றனர்.
எனினும் தன்னை பார்க்க சிறைக்கு வரும் வக்கீல்களிடமிருந்து தமிழக அரசியல் நிலவரங்களை சசி ஆர்வமாக கேட்டு தெரிந்து கொள்வதாகவும், கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய விஷயங்களையும் அவ்வாறே தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் தனக்கென டிவி எதுவும் இல்லாவிட்டாலும் கூட, சிறை அறைக்குள் முடங்கியிருந்தாலும் கூட தனது வக்கீல்கள் மூலமாக தமிழக நிகழ்வுகளை ஒன்று விடாமல் சசிகலா அறிந்து வைத்திருப்பதாகவும், அதைக் கொண்டு உரிய உத்தரவுகளை அவர் பிறப்பித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிறைக்குள் வந்தவுடன் அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவருக்கு பட்டியல் வழங்கப்பட்டதாகவும், அதில் அவர் மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணியை மேற்கொள்வதாக தேர்வு செய்தபோதிலும் அந்தப் பணியை அவர் இதுவரை தொடங்கவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.