கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள்: பி.காம் சீட் ரூ. 7 லட்சம்
சென்னை: மருத்துவம், பொறியியல் படிப்புகளை விட தற்போது கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு கல்லூரிகளில் போதுமான இடம் இல்லாத காரணத்தால் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஏழை மாணவ மாணவர்கள் தனியார் கல்லூரிகளையே நாட வேண்டியுள்ளது.
சென்னையில் பிரபல தனியார் கல்லூரிகளில் பிகாம் படிப்புகளில் சேர சீட்டுக்கு ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை விலை பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விரும்பிய படிப்பு கிடைக்காத மாணவ, மாணவிகள், அதிக பணம் கொடுத்து படிக்க முடியாத மாணவிகளும் மேற்படிப்பை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கூட்டம் அலைமோதுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்தே, கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
காமர்ஸ் குரூப்பில் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள், அறிவியல் பாடத்தை பிரதானமாக எடுத்துப் படித்த மாணவர்கள்கூட, பி.காம் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனராம். இதனால் அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் பி.காம் சீட்டுகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் உள்ள பிரபலமான கலைக் கல்லூரியில், பி.காம் சீட்டுகள் மட்டும் ஏழு லட்சம் முதல் பத்து லட்ச ரூபாய் வரையில் விலை பேசப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசதிபடைத்த பெற்றோர்களும் சத்தம் இல்லாமல் பணம் கொடுத்து அட்மிஷன் வாங்கிவிட்டதால் 1125 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு பிகாம் சீட் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பி.காம் படிப்புகளுக்கு சுமார் 25 வருடங்களாகவே டிமாண்ட் உள்ளது. இந்த ஒரு பட்டப் படிப்பை முடித்துவிட்டாலும் மார்கெட்டிங் பிரிவு, வர்த்தகம், ஃபைனான்ஸ், வங்கி, கணக்குப் பதிவியல், ஆடிட்டிங் உதவியாளர் என பல துறைகளிலும் மாணவர்கள் பணிபுரியலாம்.
பாடப் பிரிவுகளுக்கு டிமாண்ட் அதிகரிக்கும்போதெல்லாம், கல்விக் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்திவிடுகின்றன தனியார் கல்விக் கூடங்கள். அரசு இயந்திரங்களும் மறைமுகக் கட்டணக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன எனக் குமுறுகின்றனர் பெற்றோர்கள்.
மாணவ, மாணவிகள் அவதி
பெரும்பாலான அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங் கலை, முதுகலை படிப்புகளில் இடங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் இடம் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.
சென்னை கல்லூரிகள்
தமிழகத்தில் 67 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. சென்னையில் ராணி மேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி, பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி, நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் உள்ளன.
அதிக கட்டணம் வசூல்
தனியார் சுயநிதி கல்லூரிகளில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவ, மாணவிகள் பெரும்பாலும் அரசு கல்லூரிகளையே நாடு கின்றனர். அரசு கலைக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை படிப்பு களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவார்கள்.
எண்ணிக்கை குறைப்பு
முன்பு இளங்கலை படிப்புகளில் 70 மாணவர்கள் வரை சேர்க்கப் பட்டனர். தமிழ்வழியில் 70 இடங்கள், ஆங்கிலவழியில் 70 இடங்கள் ஒதுக்கப்பட்டன. பின்னர் இந்த எண்ணிக்கை 40 ஆக குறைந்தது. கடந்த கல்வி ஆண்டில் (2015-16) அந்த எண்ணிக்கை 24 ஆக குறைக்கப்பட்டது.
ராணி மேரி மகளிர் கல்லூரி
சென்னையில் பாரம்பரியமிக்க அரசு கல்லூரியான ராணி மேரி மகளிர் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, எம்பில், பிஎச்டி படிப்புகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இளங்கலை படிப்பு களில் (பிஏ, பிஎஸ்சி, பிகாம்) கடந்த கல்வி ஆண்டில் இருந்து தமிழ்வழியில் 24 மாணவிகள், ஆங்கிலவழியில் 24 பேர் சேர்க்கப்படுகின்றனர்.
குற்றாச்சாட்டு
பொதுவாக மாணவ, மாணவி களிடம் இருந்து அதிக விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில் இடங்களை 30 சதவீதம் வரை அதிகரிக்க, துறைத் தலைவர் களை உள்ளடக்கிய கல்லூரி பேரவை நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ராணி மேரி கல்லூரி பேரவை கடந்த 2 ஆண்டுகளாக அதற்கான முயற்சியை எடுக்க வில்லை என்பது பேராசிரியைகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் ஏழை மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
அரசு கல்லூரிகள்
போதிய எண்ணிக்கையில் ஆசிரியைகள், ஆய்வகம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் என அனைத்து வசதிகளும் இருந்தும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்லூரி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. தமிழகத்தில் உள்ள பெரும் பாலான அரசு கலை கல்லூரிகளில் இதுபோன்ற குறைபாடுகள் காணப்படுவதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.
படிப்பை கைவிடும் மாணவிகள்
அரசு கலை கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஏழை மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதிக பணம் கொடுத்து தனியார் கல்லூரிகளில் படிக்க வசதி இல்லாமல் மேற்படிப்பை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் மாணவிகள். அரசு கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications