திருநள்ளாறு கோவில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது
திருநள்ளாறு: திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு பிறகு, உண்டியல் எண்னும் பணி தொடங்கியது.
திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் 6 மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். கடந்த டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக உண்டியல் எண்ணப்பட்டது. தொடர்ந்து, சனிப்பெயர்ச்சி விழா முடிந்தும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்கள் கூட்டம் வந்தவண்ணம இருந்தமையால், உண்டியல் எண்ணும் பணி தள்ளிவைக்கப்பட்டது.
நேற்று பகல், சனி பகவான் கோயிலை சுற்றியுள்ள 20 இடங்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி தொடங்கியது.
கோயில் ஊழியர்களுடன், கோயிலுடன் கணக்கு வைத்துள்ள வங்கி ஊழியர்களும் ஈடுபட்டனர். உண்டியலில் உள்ள பணம், தங்க நகை, வெள்ளிப்பொருட்கள், சில்லரைகள், காணிக்கைகள் தனித்தனியே தொடர்ந்து 4 நாட்கள் எண்ணிய பிறகு மொத்த கணக்கீடு அறிவிக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில்
கூறப்பட்டுள்ளது.