கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பியை கண்டித்து உண்ணாவிரதம்... கடை அடைப்பு
மதுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை கண்டித்து இன்று உண்ணாவிரதம் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர்.
தடியடி
போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர். அதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மண்டை உடைப்பு
மேலும், போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை வன்முறை களமாக மாற்றிய போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பும் கண்டனமும் வலுத்து வருகிறது.
எதிர்ப்பு
இந்நிலையில், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்டனை கொடு
டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரத்தில் மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.