மகளுக்கும் மாப்பிள்ளை பார்க்க விடாமல், தானும் கள்ளக்காதலில் ஈடுபட்டு.. மனைவியைக் காலி செய்த கணவர்!
சென்னை: சென்னையில் கள்ளக்காதலில் ஈடுபட்டதோடு, மகளுக்கும் மாப்பிள்ளை பார்க்க விடாமல் தடுத்து இடையூறு செய்து வந்த மனைவியை கொலை செய்தார் கணவர்.
கள்ளக்காதல் கொலைகள் சென்னையில் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு முருகன் என்ற வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அம்பத்தூரில் ஒரு பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் துப்பு துலங்கியுள்ளது. அவரது கணவரே அப்பெண்ணை போட்டுத் தள்ளியுள்ளார். அப்பெண்ணின் பெயர் லீலாவதி. 48 வயதாகும் இவரது கணவர் பெயர் பாஸ்கர். 53 வயதாகிறது. இத்தம்பதிக்கு 23 வயதில் நந்தினி என்ற மகளும், 24 வயதில் மோகன்ராஜ் என்ற மகனும் உள்ளனர். மோகன்ராஜ் வேலை பார்க்கிறார். நந்தினி எம்.காம் படிக்கிறார்.
சம்பவத்தன்று தனது வீட்டின் கீழ்த் தளத்தில் லீலாவதி இருந்துள்ளார். மேல் தளத்தில் மகள் இருந்துள்ளார். மதியம் வீட்டுக்கு வந்த மோகன்ராஜ் தனது தாயார் தலையில் ரத்தக் காயத்துடன் உயிருக்குப் போராடி வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தந்தைக்குத் தகவல் கொடுத்தார். அவரும் வந்தார். இருவரும் லீலாவதியை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லீலாவதி உயிரிழந்தார்.
போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். பாஸ்கர் வீட்டுக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவை பதிவை வைத்து போலீஸார் ஆராய்ந்தபோது சம்பவம் நடந்த சமயத்தில் பாஸ்கர் வீட்டுக்குச் சென்றதும், பின்னர் வெளியேறியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது தான்தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் பாஸ்கர்.
இதுகுறித்து பாஸ்கர் கூறுகையில், லீலாவதிக்கும், வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது எனக்குத் தெரியவர, மனைவியை பலமுறை கண்டித்தேன். ஆனால் திருந்தவில்லை. மகளுக்கும் மாப்பிள்ளை பார்க்க முயன்றேன். அதையும் தட்டிக் கழித்து வந்தார். தான் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் கட்ட வேண்டும் என்று கூறி வந்தார். இதனால் பார்க்கும் வரன்களையெல்லாம் நிராகரித்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்து கொலை செய்ய முடிவு செய்தேன். நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கீழ் தளத்தில் தூங்கி கொண்டிருந்தார் லீலாவதி. மேல்தளத்தில் நந்தினி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த நான் இரும்பு பைப்பால் லீலாவதியின் கழுத்தில் அடித்தேன். தலையின் பின்பக்கம் தாக்கினேன். இதையடுத்து அங்கிருந்து கடைக்கு சென்று வி்ட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.