சண்டை போட்டு அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி: விஷம் குடித்து கணவர் தற்கொலை!
பண்ருட்டி: பண்ருட்டியில் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த மறுத்த காரணத்தினால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டியை அடுத்த பைத்தாம்பாடி காலனியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் மனோன்மணி. இவருக்கும், உளுந்தூர் பேட்டையை அடுத்த ஆனைவாரி காலனியை சேர்ந்த பாலமுருகன் என்ற தொழிலாளிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
எனினும் இந்த தம்பதிக்கு குழந்தைப்பேறு கிட்டவில்லை. சமீப காலமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் கணவனிடம் கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோன்மணி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். எனவே மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர அங்கு பாலமுருகன் சென்றார்.
ஆனால் மனோன்மணி குடும்பம் நடத்த கணவன் வீட்டுக்கு வர மறுத்து விட்டார். இதனால் விரக்தியடைந்த பாலமுருகன், மதுபாட்டிலில் விஷம் கலந்து குடித்து மாமனார் வீட்டு முன்பு மயங்கி விழுந்தார்.
உயிருக்கு போராடிய பாலமுருகனை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரபாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.