முள்ளிவாய்க்கால் முற்றம் விவகாரம்.. சசிகலா கணவர் மீது வழக்கு.. முன்ஜாமீன் கோரி மனு
மதுரை: முள்ளிவாய்க்கால் முற்றம் விவகராம் தொடர்பாக சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளார்.
அவருடன் அவரது தம்பி சுவாமிநாதனும் முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார்.
தஞ்சை, விளார் சாலையில், தமிழ் ஆர்வலர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் நடவடிக்கையில் நேற்று அதிகாரிகள் ஈடுபட்டனர். சுற்றுச்சுவரை இடித்து இரும்பு வேலியைப் போட்டு பாதையை அடைத்தனர்.
தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு
இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையை எடுத்துப் போராட்டம் நடத்திய பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முற்றுகைப் போராட்டத்தில் குதித்தார். மேலும் முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் கடுமையாக சாடிப் பேசினார்.
முன்ஜாமீன் கோரும் நடராஜன்
இந்த நிலையில், நடராஜனும், அவரது தம்பி சுவாமிநாதனும் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகியுள்ளனர்.
பொது அமைதிக்குப் பங்கம்
இருவர் மீதும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகவும், போலீஸ் உத்தரவை மீறி நடந்து கொண்டதாகவும் கூறி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்தே இருவரும் முன்ஜாமீன் கோரியுள்ளனர்.
நான் சிறப்பு விருந்தினர் மட்டுமே
இதுகுறித்து நடராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது பெயரையும் போலீஸார் வழக்கில் சேர்த்துள்ள்ளனர். நான் முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டேன். எனக்கும் அந்த விழா ஏற்பாடுகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.
நான் பார்வையாளன் மட்டுமே
சுவாமிநாதன் தனது மனுவில், நான் வெறும் பார்வையாளனாக மட்டுமே கலந்து கொண்டேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் அப்பாவி என்று தெரிவித்துள்ளார்.