கள்ளக்காதலை கண்டித்த ‘காதல்’ மனைவியைக் கொன்ற கணவன்
ஊத்துக்கோட்டை: கள்ளக்காதலைக் கண்டித்ததிற்காக மனைவி மீது அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் குப்பம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் காளிமுத்து (30). இவரது மனைவி பெயர் நதியா (27). ஒரே பகுதியைச் சேர்ந்த இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு பிரியா (8), ஆண்ட்ரியா (5) என இரு மகள்களும், ராக்கி (2) என்ற ஒரு மகனும் உள்ளான்.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக காளிமுத்துவுக்கு சோழவரத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வருவதாகத் தெரிகிறது. இதை அறிந்த நதியா கணவரைக் கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
தனது கணவரின் நடவடிக்கைகள் சரியில்லை என தன் அண்ணன் கலைவாணனிடம் தெரிவித்துள்ளார் நதியா. அவரும் இது தொடர்பாக காளிமுத்துவைக் கண்டித்துள்ளார். இதனால் நதியா மீது மேலும் ஆத்திரம் அடைந்த காளிமுத்து அவரை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை இது தொடர்பாக தம்பதியிடையே மீண்டும் பிரச்னை வெடித்துள்ளது. அப்போது நதியாவை காளிமுத்து அடித்துள்ளார். பின்னர் வெளியே சென்ற காளிமுத்து இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியைக் கண்டதும் மேலும் கோபமடைந்த காளிமுத்து, சமையல் அறையில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து வந்து நதியாவின் தலையில் தாக்கியுள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த நதியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். அப்போது எதேக்சையாக தங்கையைக் காண நதியாவின் அண்ணன் கலைவாணன் வீட்டுக்கு வந்துள்ளார். கலைவாணனைக் கண்டதும் காளிமுத்து தப்பி ஓடி விட்டார். ஏதோ விபரீதமாக நடந்துள்ளதை ஊகித்த கலைவாணன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, நதியா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து கலைவாணன் அளித்த புகாரின் பேரில் வெங்கல் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வெங்கல் போலீசில் காளிமுத்து சரண் அடைந்ததைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் காளிமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications