நான் "சென்னை" பேசுகிறேன்... என்னை காப்பாற்றுவீர்களா?
வந்தாரை வாழ வைக்கும் சென்னை ஒவ்வொரு முறையும் இயற்கை பேரழிவில் சிக்கி சின்னாபின்னமாகிறது.
சென்னை: எத்தனை முறை எரிந்தாலும் மீண்டெழும் பீனிக்ஸ் பறவை போல சென்னை எழில் கொஞ்சும் நகரமாக பலருக்கும் வாழ்வளித்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர்களில் சிக்கி சின்னாபின்னமாகும் தலைநகரை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டிய காலம் இது.
சென்னை பேசினால் அது இப்படித்தான் இருக்குமோ...? சென்னை எனும் நான் மதறாஸாக இருந்தபோது மிகவும் அழகிய குட்டி நகரமாக இருந்தேன். கடந்த 50 ஆண்டுகளில் என்னை மிகப்பெரிய நகரமாக்குவதாகச் சொல்லிக்கொண்டு என்னை வாட்டி கொடுமை செய்தார்கள். கேளுங்கள் என் சோகக்கதையை..
என்னைச்சுற்றி மிகவும் அழகான ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள், தடுப்பணைகள் என 10 ஆயிரத்திற்கும் அதிகமான நீர்நிலைகள் பரவிக்கிடந்தன. எங்கு மழைபெயதாலும், எவ்வளவு மழை பெய்தாலும் எல்லோரும் மழையை பகிர்ந்துகொள்வோம். அதிகம் பெற்றவர்கள், இல்லாதவர்களுக்கு நீர் அனுப்பிவந்தோம். மக்களும் மழைகாலத்தில் என்னை நல்லபடியாக கவனித்து வந்தார்கள். நாங்களும் அவர்களை தொல்லை செய்யாமல் நீர் கொடுத்து உதவி செய்துவந்தோம்..
வாழ்வளித்த என்னை கண்டுகொள்ளவில்லை
பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த நிலை, 1950களுக்குப் பிறகு மாறத்தொடங்கியது. ஒரு பக்கம் என்னை நோக்கி பிற மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து பலர் குடியேறத் தொடங்கினர். பல மொழிபேசும் மக்களை நான் வரவேற்று வாழவைத்தேன். வந்தோரை வாழவைக்கும் மெட்ராஸ் என்று என்னை எல்லோரும் புகழ்ந்தார்கள். ஆனால், என்னைப்பற்றி யாரும் கண்டுகொள்ளாவில்லை..
கூவத்தை மாசு படுத்தினார்கள்
மிக அதிக எண்ணிக்கையிலான வாகனங்களிலிருந்து வெளியேறிய நச்சுப்புகையால் எனக்கு மூச்சடைத்தது. மறுபக்கம், என்னைச் சுற்றி ஓடிய நீர்நிலைகளில் சாக்கடைகளை கலந்துவிட்டார்கள். எந்தளவுக்கு என்றால், புண்ணியமாக இருந்த கூவம் என்ற நதியை கடக்கும்போது நாற்றத்தில் மூக்கை பொத்திக்கொண்டு போகும் அளவுக்கு நிலைமை மோசமானது.
அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்
என் மீது அழகாக பசுமை போர்த்தியிருந்த மரங்களில் பலவற்றை வெட்டி சாய்த்தார்கள். அதையும் நான் பொருத்துக்கொண்டேன். ஆனால், இயற்கை பாதித்தது. மழைபெய்வதில் பல மாற்றங்கள் நடந்தன. இதனால், பல ஆண்டுகளாக நீர் நிலைகள் வரண்டு கிடந்தன. முறையான மழை இல்லை, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. என்மீது ஆயிரக்கணக்கில் ஓட்டை போட்டு நீர் எடுத்து பயன்படுத்தினார்கள். அதையும் நான் பொறுத்துக்கொண்டேன்.
நாசக்காடாக மாற்றினீர்கள்
நீர்நிலைகள் வறண்டு கிடந்தால், அவைகளை ஆக்கிரமித்து வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளைக் கட்டினார்கள். இருப்பதிலேயே இதுதான் மிகப்பெரிய துன்பத்தை எனக்கு தந்துவருகிறது. வளர்ச்சி வளர்ச்சி என்ற பெயரில் முறையாக திட்டமிடப்படாத வகையில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக மாறினேன். என்னைச் சுற்றி தொழிற்பேட்டைகள் உருவாகின. அதேபோல், திடக்கழிவுகளை தொடர்ந்து எனது நீர்நிலைகளில் கொட்டி மிகப்பெரிய நாசக்காடாக மாற்றினார்கள். அதையும் பொறுத்துக்கொண்டு இருக்கிறேன்.
அவசியத்தை உணர்த்திய சுனாமி
எனது இந்த நிலையை கண்ட வங்க கடல் தோழி வருந்தி அழுதாள். திடீரென கடும் கோபம் கொண்டு, சொன்னால் கேற்காமல், 2004 ஆம் ஆண்டுவாக்கில் பெரிய அலையை ஏற்படுத்தி மக்களை அச்சத்திற்குள்ளாக்கினாள். இயற்கையின் சக்தியை மக்கள் உணரவேண்டுமென நினைத்தாள் போலும். ஆனால், மக்கள் மாறுவதாக தெரியவில்லை.. எல்லா அட்டூழியங்களும் தொடர்ந்தன.
என்னை வாழ வையுங்கள்
இறுதியாக நீதிமன்றங்கள் என்னை காப்பாற்றும் என நம்பினேன். என்னை காக்கச்சொல்லி பல தீர்ப்புகளையும் நீதிபதிகள் கொடுத்தார்கள். ஆனால், ஆட்சியிலிருந்தவர்கள் அதை நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் சிக்கி, தங்க வீடில்லாமல், உண்ண உணவு இல்லமல் சிரம்ப்படும் ஏழை போல நான் சிக்குண்டுள்ளேன்.. எனக்கு ஸ்டிக்கர் ஒட்டிய எந்த நிவாரணமும் வேண்டாம். என்னை பழையபடி வாழ விடுங்கள்.. அதுவே அனைவரும் இயற்கையுடன் துணையுடன் வாழ வழிவக்கும்..