ஆர்.கே.நகரில் போட்டி உறுதி.. ஓ.பி.எஸ் அணி ஆதரவளித்தால் ஏற்கப்படும்: தீபா தடாலடி
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை: இடைத்தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட செய்வேன் என தீபா அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைதேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு ஏப்ரல் 15ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொகுதியில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் ஜெ.தீபா போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் தீபா பேசியதாவது: ''நான் ஆர்கே நகர் தொகுதியில் நடக்கும் இடைதேர்தலில் போட்டியிட உள்ளேன். ஜெயலலிதாவின் ஆன்மா என்னை வழிநடத்தும். சசிகலா அணியினருடன் இணையும் எண்ணம் இல்லை. ஓபிஎஸ் அணியினர் ஆதரவு தந்தால் அதை ஏற்றுக்கொள்வேன். திமுக, அதிமுக சசி அணி தவிர யார் ஆதரவு தந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார். மக்கள் ஆதரவு எனக்கு இருப்பதால் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்.'' இவ்வாறு தீபா கூறினார்.
தீபா, 'எம்ஜிஆர் அம்மா தீபா' பேரவை என்ற அமைப்பை நிறுவினார். அதை நிறுவிய சிலநாட்களிலேயே அந்த அமைப்பின் நிர்வாகிகளுக்குள் பூசல் வந்தது குறிப்பிடத்தக்கது.