தினகரனின் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு 'நோ' பதில்.... மு.க.ஸ்டாலின் ஒரே போடு!
ஆர்.கே நகர் தொகுதியின் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்க தயாராக இல்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: அதிமுக ஆட்சியை கவிழ்க்க தாம் பேரம் பேசி வருவதாக கூறும் டிடிவி தினகரனின் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு தம்மால் பதில் கூறமுடியாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆர்.கே.இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார் தினகரன். இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று, இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்பேன். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து அதன் மூலம் வெற்றி பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
மக்களிடம் எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேரம் பேசி வருகிறார். எங்கள் எம்எல்ஏ-க்களிடமே மு.க.ஸ்டாலின் சென்று நீங்கள் 5 அல்லது 6 பேர் ஓபிஎஸ் அணியில் இணைந்து கொள்ளுங்கள் என்று அவர்களை கட்டாயப்படுத்தி வருகிறார் என்றார் தினகரன்.
தினகரனின் இந்த குற்றச்சாட்டு குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது, இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகள் மூலம் அரசியல் விளம்பர தேட தினகரன் முயற்சிக்கிறார். இதுபோன்ற தரம் தாழ்ந்த அவரது விமர்சனங்களுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது என்றார் மு.க.ஸ்டாலின்.