துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்.. அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் உருக்கம்!
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை கவனிக்க துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக பேசியுள்ளார்.
Recommended Video
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணிகளை கவனிக்க துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக பேசியுள்ளார்.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
செயற்குழுவில் ஆலோசனை
இந்த கூட்டத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. புதிதாக கட்சி பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் செயல்பாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. மாலை 4.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 8 மணிக்கு முடிந்தது.
இரங்கல் தீர்மானம்
கூட்டத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளா மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தயாராக இருக்க வேண்டும்
கட்சிப் பணிகள் குறித்து நான் அவரிடம் ஆலோசனை நடத்துகிறேன். ஆட்சி பற்றி அவர் என்னுடன் ஆலோசனை நடத்துகிறார். நமக்கு ஆட்சி முக்கியமில்லை. கட்சிதான் முக்கியம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.
ராஜினாமா செய்ய தயார்
மூத்த அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும். தொண்டர்கள் விரும்பினால் நானே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப் பணியை செய்ய தயாராக இருக்கிறேன் என உருக்கமாக பேசினார் ஓ.பன்னீர்செல்வம். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.