ஜெயலலிதா சிறைபட்டிருப்பது வேதனை தருகிறது - அற்புதம் அம்மாள்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறைப்பட்டிருப்பது வேதனையைத் தருகிறது. அவர் மீண்டும் வருவார், நம்மையெல்லாம் ஆளுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அற்புதம் அம்மாள் கூறியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடி வரும் பேரறிவாளினின் தாயார் அற்புதம் அம்மாள். பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று தமிழர் விடுதலைக்காக முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். தமிழக சட்டசபையிலும் அதிரடியாக தீர்மானம் போட்டவர்.

மேலும் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டு நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியவர். இதற்காக ஜெயலலிதாவை அப்போது நேரில் சந்தித்து நன்றியும் கூறியிருந்தார் அற்புதம் அம்மாள்.
தற்போது ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு அற்புதம் அம்மாள் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தாயுள்ளத்துடன் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தவர் ஜெயலலிதா. ஒரு பெண்ணாக, அவர் எந்த அளவுக்கு தைரியமாகவும், துணிச்சலாகவும், முடிவுகளை எடுக்கிறார், செயல்படுகிறார் என்பதைப் பார்த்து அனைத்துப் பெண்களுமே ஆச்சரியமும், பெருமையும் அடைந்திருந்தோம்.
தம்மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தகர்த்தெறிந்து மீண்டும் வெற்றிதிருமகளாக ஆட்சிப் பொறுப்பேற்பார். அவர் சிறைப்பட்டிருப்பது வேதனையாக இருக்கிறது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சட்டப்படியாக, நீதிப்படி சந்தித்து, நிரபராதி என நிரூபி்த்து அவர் வெளியே வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக கூடிய விரைவில் அவர் வெளி வந்து மறுபடியும் நம்மை ஆளுவார், நல்லாட்சி செய்வார் என்று நம்புகிறேன், காத்திருக்கிறன் என்றார் அற்புதம் அம்மாள்.












Click it and Unblock the Notifications