தூங்கி எழுவதற்குள் இப்படி வதந்தி பரப்புவதா? கொதிக்கும் சாருபாலா
திருச்சி: நான் இன்னமும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். அசந்து தூங்கிய நேரத்தில் கட்சி மாறிவிட்டதாக வதந்தி பரப்பி விட்டனர் என்று சாருபாலா தொண்டைமான் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து வந்தபோது, அவரது தலைமையை ஏற்று முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமானும் தமாகாவில் இணைந்தார். தற்போது திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக இவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், திடீரென தேமுதிக- மக்கள் நலக்கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைந்தார்.
இதனால் தமாகாவில் கழகக்குரல் வெடித்தது. மூத்த தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோர் கட்சி தாவ இருப்பதாக தகவல் வெளியானது.
இதில் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் கூட்டணி தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டனர். இருவரும் தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணையப்போகின்றனர். ஆனால், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் தான் அதிமுகவில் சேர இருப்பதாக வந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று மறுத்தார்.
இந்த நிலையில், சாருபாலா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக நேற்று தகவல் பரவியது. இந்த தகவல் சாருபாலாவுக்கும் சென்றது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர், "என்னுடைய வளர்ச்சியை பிடிக்காத உள்ளூர்காரர்கள் யாரோ, இப்படி வதந்தியை கிளப்பியுள்ளனர். நான் தமாகாவில்தான் இருக்கிறேன். உடல் நிலை சரியில்லாததால் மாத்திரை சாப்பிட்டு அசந்து தூங்கி விட்டேன். என் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் இப்படி கிளப்பி விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.