சுவாதி கொலையில் மத பின்னணி?, பிலால் மாலிக் யார்? ராம்குமார் எழுதிய கடிதம் சொல்வது என்ன?
சென்னை: சுவாதி கொலையில் மத பின்னணி இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து, சிறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும், ராம்குமார், கடந்த 10ம் தேதி தமிழ் செய்தி டிவி தொலைக்காட்சி ஒன்றுக்கு கைப்பட எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டது முதலே, பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தன. போலீசார் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனல், புழல் சிறையில் இருந்த ராம்குமாரின் கருத்தை அறிய விரும்பி, அவரின் வழக்கறிஞர் ராம்ராஜ் மூலமாக சில கேள்விகளை ராம்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளது.
வக்கீல் வழியாக கடிதம்
சிறைத்துறை அதிகாரி அனுமதி பெற்று இந்த கடிதம் ராம்குமாரிடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு ராம்குமார் கைப்பட பதிலையும் எழுதி வழக்கறிஞர் மூலமாக டிவி சேனலுக்கு அனுப்பியுள்ளார். இது நடந்தது, கடந்த 10ம் தேதியாம்.
பிலால் மாலிக் யார்?
இந்த கடிதத்தில், டிவி சேனல் சார்பாக கேட்கப்பட்ட ஒரு கேள்வி பிலால் மாலிக் பற்றியது. கொலை வழக்கில் முக்கிய சாட்சியமாக உள்ள பிலால் மாலிக் பற்றி உங்களுக்கு தெரியுமா என்ற கேள்விக்கு, தெரியாது.. என ராம்குமார் பதிலளித்துள்ளார்.
விடிய, விடிய விசாரணை
சுவாதியின் ஆண் நண்பரான பிலால் மாலிக் பெயர் வழக்கின் ஆரம்பம் முதலே வெளியாகிவருகிறது. ஒரு கட்டத்தில் போலீசார் பிலால் மாலிக்கிடம் விடியவிடிய காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய சம்பவமும் அரங்கேறியது.
மதரீதியான பின்புலம்
இந்த சம்பவத்தில் மதரீதியான பின்புலம்தான், கொலைக்கு காரணம் என்று பேசப்படுகிறது. இது தொடர்பாக உங்களிடம் யாராவது பேசினார்களா,? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?.. என்ற கேள்விக்கு, அதுபற்றி எனக்கு தெரியாது.. என ராம்குமார் பதில் எழுதியுள்ளார்.
பொய்.. பொய்.. பொய்
சம்பவத்தன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் அருகே சிசிடிவியில் பதிவான உருவம், சம்பவத்தை ஒட்டிய நாட்களில் ஊருக்கு போய் தலைமறைவானது, மேன்சன் அறையில் ரத்தக்கறை படிந்த சட்டை, சுவாதியை வெட்டியதை ஒப்புக்கொண்டு நீங்கள் கொடுத்த வாக்குமூலம்.. போன்றவை குறித்த கேள்விக்கு, பதிலளித்துள்ள ராம்குமார், "அனைத்தும் பொய். வேண்டும் என்றே, ஒருதலைப்பட்சமாக குற்றவாளியை மறைத்து, என்னை துப்பாக்கி முனையில் மிரட்டினர்". இவ்வாறு ராம்குமார் கூறியுள்ளார்.