தேவையில்லாத விஷயங்களை டிவியில் பார்க்க மாட்டேன்: ஸ்டாலின்!
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சியில் நடக்க உள்ள தி.மு.க. மாநாடு பெரிய திருப்புமுனையை ஏற்படும். இந்த மாநாட்டில் கூட்டணியில் சேர்ந்துள்ள கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வேட்பாளர் பட்டியலை உரிய நேரத்தில் கருணாநிதி அறிவிப்பார். மத்தியில் மதச்சார்பற்ற, மக்களுக்கு நன்மை பயக்கும், மக்கள் மீது அக்கறை கொண்ட அரசு அமைக்க பாடுபடுவோம்" என்றார்.
மதுரையில் தி.மு.க. அமைப்புகள் கலைக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, தலைவர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் அன்பழகனும் எடுத்த முடிவு. அதையே நான் வழிமொழிகிறேன் என்றார் ஸ்டாலின்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், ஏற்கனவே சில கட்சிகள் எங்களோடு கூட்டணி சேர்ந்திருக்கிறது. இந்த மாநாட்டிற்கு பிறகு இன்னும் சில கட்சிகள் எங்களோடு கூட்டணிக்கு வரும் என்று நம்புகிறேன். எங்களோடு கூட்டணி சேருவது பற்றி விஜயகாந்த் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
தே.மு.தி.க.வுடன் தி.மு.க கூட்டணி வைப்பது நல்லதல்ல என்றும், மதுரையில் கட்சி கலைக்கப்பட்டது குறித்து தனது கவனத்துக்கு வரவில்லை என்றும் அழகிரி கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் தேவையில்லாத விஷயங்களை கவனத்தில் எடுத்து கொள்வதில்லை. தேவையற்ற விஷயங்களை தொலைக்காட்சியிலோ, செய்தித்தாள்களிலோ பார்ப்பதுமில்லை, படிப்பதுமில்லை" என்றார்.