சசிகலாவை ஒதுக்குவதாக கூறியபோது வாழ்நாளில் அடையாத மகிழ்ச்சியை அடைந்தேன்.. அமைச்சர் பரபரப்பு பேச்சு
சசிகலாவை ஒதுக்குவதாக முதல்வர் என்னிடம் கூறியபோது வாழ்நாளில் அடையாத மகிழ்ச்சியை அடைந்ததேன் என அமைச்சர் வீரமணி கூறியுள்ளார்.
வேலூர்: சசிகலாவை கட்சியில் இருந்து ஒதுக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னிட்ம் கூறிய போது வாழ்நாளில் அடையாத மகிழ்ச்சியை அடைந்தேன் என அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பம் தான் காரணம் என மக்கள் மனதில் பதிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். சசிகலா குடும்பத்தினரால் தாக்கப்பட்டதாலேயே ஜெயலலிதா உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கூறிவந்தனர். சசிகலா குடும்பத்தினர்தான் ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக மக்கள் மத்தியில் பேச்சு இருந்து வருகிறது.
சசிகலாவுக்கு எதிர்ப்பு
அப்பல்லோ எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்ததுவமனைகளின் முன்னுக்குப்பின் முரணான சிகிச்சை அறிக்கைகளும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை வலுப்படுத்தியது. இந்நிலையில் சசிகலா தரப்பு தலைமையிலா அரசு ஆட்சியமைத்தது. இதற்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சசிகலாவுக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அவர்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
வாழ்நாளில் அடையாத மகிழ்ச்சி
இந்நிலையில் வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் வீரமணி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் சசிகலாவை ஒதுக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் கூறிய போது வாழ்நாளில் அடையாத மகிழ்ச்சியை அடைந்தேன் என தெரிவித்தார்.
ஜெ.மரணம் சசிதான் காரணம்
நான்கு மாதங்களாக திருமண நிகழ்ச்சிகளுக்கோ, துக்க நிகழ்ச்சிகளுக்கோ செல்ல முடியவில்லை என்றும் கட்சி தொண்டர்களை சந்திக்க முடியவில்லை என்றும் வீரமணி கூறினார்.ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பம் தான் காரணம் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்றும் வீரமணி பேசினார். மக்கள் எங்களை குற்றவாளிகள் போல் பார்த்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரே இரவில் மாற்றம்
மாவட்டத்தில், சசி படத்தை வைக்க சொன்ன போது முடியாது என மறுத்துவிட்டேன் என்றும் அமைச்சர் வீரமணி கூறினார். ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலகிய பிறகு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் பதவியை பெற்று இதுநாள் வரை சசிகலா அணியிலேயே இருந்தார் அமைச்சர் வீரமணி.தற்போது சசிகலா குடும்பத்தை எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் விலக்கியதை தொடர்ந்து ஒரே இரவில் சசிகலாவுக்கு எதிராக பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.