பயந்து ஓடிப்போகவில்லை.., இன்று முதல் அரசியல் பிரவேசம் செய்துவிட்டேன்: தீபா அறிவிப்பு
சென்னை: அரசியலில் குதித்துவிட்டதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கையை பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் தினத்தில் அறிவிக்கப்போவதாகவும், ஜெ. அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.
சென்னை, தி.நகரிலுள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான தீபா. முன்னதாக அவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தார்.
தீபா அரசியலில் குதிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கூறியதாவது:

தவிக்கிறார்கள்
தமிழக மக்களை தனது பிள்ளைகளை போல ஏற்று வாழ்ந்தவர் அம்மா. அம்மா இன்று உங்களை பிரிந்து உங்கள் குழந்தைகள் தவிக்கின்றன. நீங்கள் தெய்வமாக நின்று எங்களை வழிநடத்த வேண்டும். பெரியார் மற்றும் அண்ணா வழி நின்று 1972ல் அதிமுகவை உருவாக்கி மக்களாட்சியை மலர செய்தவர் எம்ஜிஆர்.

அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை
அவர் மறைவுக்கு பிறகு கழகம் மற்றும் மக்களை வழிநடத்தி மகத்தான சாதனை படைத்தவர் அம்மா. உடல் நலக்குறைவால் ஏறத்தாழ இரண்டரை மாதகாலம் சிகிச்சை பெற்றார் அவர். ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த அதிர்ச்சியிலிருந்து கோடான கோடி மக்கள் மீண்டுவரும் முன்பு தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்த சூழ்நிலையில் அதிமுக தொண்டர்கள், மக்கள் நான் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிவீர்கள்

எளிய பெண்
நான் எளிய முறையில் வாழ்க்கை நடத்தும் சாதாரண பெண். இதழியல் படித்து சில காலம் பத்திரிகையாளராக பணியாற்றினேன். எனக்கு குழந்தை, குடும்பம் பொறுப்பு உள்ளது. இருப்பினும் என்மீது நம்பிக்கை வைத்து அழைப்புவிடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு எனக்கு உள்ளது.

தாய்நாடு, தாய் மொழி
வரும்காலங்களில் தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். என் தாய்நாடான தமிழ்நாடு தாய் மொழியான தமிழ் ஆகியவை எனது இரு கண்களாக இருக்கும். தன் வாழ்நாளை தமிழக மக்களுக்கு அர்ப்பணித்த எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மா ஆகியோர் நல்லாசியோடு அவர்கள் பாத சுவடு வழிநடந்து மக்கள் பணி மேற்கொள்ள உள்ளேன்.

இன்று முதல் பயணம்
அதிமுக என்ற ஆல மரத்தின் பசுமை காக்கும் இலைகள் அதன் உண்மை தொண்டர்கள். அவர்கள், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்புவிடுப்பதையடுத்து நீண்ட ஆலோசனை நடத்தி இக்கோரிக்கையை ஏற்கலாம் என முடிவு செய்துள்ளேன்.
இன்று முதல் புதிய பயணத்தை தொடர உள்ளேன்.

எம்ஜிஆர் நூற்றாண்டு
ஏழை பங்காளன் எம்ஜிஆர் நூற்றாண்டு தினத்தில் நான் புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன். மக்களின் நம்பிக்கையாக வாழ்ந்து மறைந்த தெய்வத்தாய் அம்மா காட்டிய வழியில் மக்களை வழிநடத்த உங்கள் வீட்டு பிள்ளையாக உங்கள் அன்பு சகோதரி நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அம்மா நற்பணிகள் மக்களை சென்று அடைய வேண்டும். புரட்சி தலைவரின் நூற்றாண்டு விழாவான இன்று முதல் ஆசியாவிலேயே தமிழகத்தை சிறந்த மநிலமாக்க உறுதியேற்று நற்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நமது வெற்றியை சரித்திரம் சொல்லும்
மக்கள் தலைவர் எம்ஜிஆர் விட்டுச் சென்ற நல்லாட்சி, அவரின் அரசியல் வாரிசு அம்மாவின் மக்களாட்சியை மலர செய்வதே அதிமுக உண்மை தொண்டர்கள் லட்சியமாகும். நமது நோக்கம் தூய்மையானது, தீர்க்கமானது. லட்சியம் உறுதியானது. நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். அம்மாவின் மீது அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு நன்றி. எனது உரிமைகளையும், கடமைகளையும் ஆற்ற பேராதரவு தெரிக்கும் மக்களுக்கு நன்றி. புரட்சி தலைவி அம்மா கனவை நிறைவேற்றும் வகையில் நம் அனைவரின் களப்பணிகளும் இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

திட்டம் பற்றி அறிவிப்பு
அம்மா பிறந்த நாளில் அரசியலில் நான் ஈடுபடுவது குறித்த அடுத்தகட்ட தகவல்களை வெளியிட உள்ளேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன். நான் அரசியலுக்கு நுழைய முடிவு செய்துவிட்டேன். பிப். 24 ஜெயலலிதா பிறந்த நாளில் எனது அரசியல் பிரவேசம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை தெரிவிப்பேன்.

ஓடவில்லை
அதுகுறித்து அறிவிக்க வேறு நல்ல நாள் இருக்க முடியாது. அரசியலில் நான் இறங்க முடிவு செய்துவிட்டேன். அதை எப்படி செய்வது என்பது குறித்து பிப்ரவரி 24ல் அறிவிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து நிருபர்கள் இதுகுறித்து கேள்விகளை எழுப்பினர். அரசியலில் இறங்குவதாக அறிவித்துவிட்ட நீங்கள் ஏன், முறையாக அறிவிக்க தாமதம் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தீபா, எனது திட்டங்களை அறிவிக்க, ஜெயலலிதா பிறந்த நாளைவிட மகத்தான நாள் இருக்க முடியாது என்பதால் தாமதம் செய்கிறேன். மேலும், அரசியல் திட்டங்களை வடிவமைக்க எனக்கும் கால அவகாசம் தேவைப்படுகிறது.
இன்றைய பிரஸ் மீட்டின் நோக்கம், நான் யாருக்கும் பயந்து ஓடிப்போகவில்லை, அரசியலில் இறங்கிவிட்டேன் என்பதை தெரிவிப்பதுதான். இவ்வாறு தீபா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications