ஜெ.வுக்கு எதிராக பாயும் பாஜகவினருக்கு எதிராக "சேம் சைட்" கோல் போட்ட வெங்கையா!
கோவை: முதல்வர் ஜெயலலிதாவை நான் 2 முறை பார்த்துப் பேசியுள்ளேன். அதில் எனக்கு சிரமம் இருக்கவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்கவே முடியவில்லை. நாட்டில் உள்ள பிற மாநில முதல்வர்களையெல்லாம் பார்க்க முடிகிறது, பேச முடிகிறது. ஆனால் ஜெயலலிதாவைப் பார்க்க முடிவதில்லை, பேச முடிவதில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறப் போக அதை பாஜக பிடித்துக் கொண்டது.

ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை, இப்படியே இருந்தால் அது தமிழகத்திற்குத்தானே நஷ்டம் என்று வரிசையாக தமிழிசை செளந்தரராஜன் முதல் பொன் ராதாகிருஷ்ணன் வரை ஒருவர் விடாமல் விமர்சித்தபடி உள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் வெங்கையா நாயுடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் 2 முறை ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அதில் எனக்கு சிரமம் ஏற்படவில்லை.
மத்திய அமைச்சர்கள் தமிழக முதல்வரை சந்திக்க முயற்சி எடுத்தும் சந்திக்காதது அவர்களது அனுபவம் என்றார் வெங்கையா.
வெங்கையா நாயுடுவின் பேச்சு சேம் சைடு கோல் போல ஆகி விட்டதாக பாஜகவினர் மத்தியில் புலம்பல் எழுந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications