பதவியை விட்டுக்கொடுப்பார் ஓபிஎஸ்- சசிகலாவிற்காக ராஜினாமா செய்வேன்: ஆர்.பி உதயகுமார்
சசிகலாவிற்காக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை விட்டுக்கொடுப்பார் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டார். அதிமுகவின் பொது செயலாளர் பதவி காலியாகவே, சசிகலாவை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கட்சி, ஆட்சியை சசிகலாவே வழி நடத்த வேண்டும் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். சசிகலாவை சந்தித்து தீர்மான நகலை அளித்து வருகின்றனர்.
ஆர்.கே. நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளிப்படையாகவே பேட்டியளித்து வருகிறார். இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார், சசிகலாதான் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று கூறினார்.
சசிகலா முதல்வராகவேண்டும் என்பதற்காக தனது பதவியை ஓ.பன்னீர் செல்வம் விட்டு தருவார் என்றும் உதயகுமார் கூறினார். சசிகலா ஆர்.கே. நகரில் போட்டியிடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக கூறப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உதயகுமார், சின்னம்மா விரும்பினால், பலரும் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார். அவர் விரும்பினால் நான் என்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.