நான் என்றும் தமிழர்கள் பக்கமே நிற்பேன்.. ரஜினி முன்பு முழங்கிய சத்யராஜ்
நடிகர் சங்க போராட்ட மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ் தான் என்றுமே தமிழர்கள் பக்கம் தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை : காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்கோரி திரையுலகினர் நடத்திய அறவழிப்போராட்டத்தில் நடிகர் சத்யராஜ், குரல் கொடுக்க தைரியம் இருந்தால் தமிழர்கள் பின்னால் நில்லுங்கள் ; இல்லாவிட்டால் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முண்ணனி நடிகர்கள் கலந்துகொண்டனர். காலை 9 மணியளவில் தொடங்கிய போராட்டம் மதியம் 1 மணியளவில் நிறைவு பெற்றது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டைத் தர வேண்டும் என்கிற கோரிக்கை உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக மேடையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அருகில் இருந்த சத்யராஜ் பேசுகையில், நான் என்றுமே தமிழ் மக்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பேன். தமிழர்களை உணர்வுகளை மதியுங்கள், அப்படி மதிக்காத எந்த அரசுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்; ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம். குரல் கொடுக்க தைரியம் இருந்தால் தமிழர்கள் பின்னால் நில்லுங்கள் ; இல்லாவிட்டால் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் என்று ஆவேசமாகப் பேசினார்.