நான் வென்றால் மதுக்கடைகளை மூடுவேன் என்கிறார் அன்புமணி.. எப்படி?
மேட்டூர்: தர்மபுரி தொகுதியில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் நான் மதுக்கடைகளை மூட நடவடிக்கை மேற்கொள்வேன் என்று பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் தர்மபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். கிராமம், கிராமமாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்
எம்.ஜி.ஆர் பாணியில்
பிரசாரத்திற்கு செல்லும் அன்புமணி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாணியில் முதியவர்களை ஆரத்தழுவி பிரசாரம் செய்தார்.
மக்கள் மத்தியில் பேசிய அன்புமணி, நான் மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்த போது கிராம மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கி உள்ளது. குறிப்பாக தர்மபுரி மாவட்டம் கல்வி, தொழில், சுகாதாரம் உள்ளிட்டவைகளில் மிகவும் பின் தங்கி உள்ளது.
தர்மபுரியை முன்னேற்றுவேன்
தமிழகத்தில் பிரதான 6 கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறோம். இக்கூட்டணி மிகப்பெரிய வெற்றி கூட்டணி ஆகும் இப்பகுதி மக்கள் வரும் தேர்தலில் எனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் தர்மபுரி மாவட்டத்தை தமிழகத்தின் அனைத்து வளர்ச்சிகள் அடைந்த முதல் 5 மாவட்டங்களுக்குள் கொண்டு வருவேன்.
நரேந்திரமோடி பிரதமரானால் நல்லாட்சி, நேர்மையான ஆட்சி தருவார். இப்போதுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவார். இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவார்.
நதிகளை இணைத்து இந்தியாவை பசுமையாக்குவார். இலங்கை தமிழர் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண்பதோடு நமது மீனவர்களுக¢கு பாதுகாப்பாக இருப்பார்.
கடந்த 47 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்த திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் நல்ல தலைவர்கள், நல்ல கட்சிகள் இணைந்து வருங்காலத்தில் தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சியை கொடுக்க இருக்கிறார்கள் அதற்கு ஒரு முன்னோட்டம்தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். நான் வெற்றி பெற்றால் மதுகடைகளை மூடுவேன் என்றார்.