கொடி இதுதான்.. மீண்டும் ஆலங்குளத்தில் போட்டி.. ஹரி நாடார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தென்காசி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக சத்திரிய சான்றோர் படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் அறிவித்துள்ளார். மேலும் அவரது கட்சியின் கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மாஜி தலைவருமான காமராஜரின் 123வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு இன்று சத்திரிய சான்றோர் படையின் தலைவர் ஹரி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதுமட்டுமின்றி ஆலங்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் முப்பெரும் விழாவை நடத்தினார். காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா, சத்திரிய சான்றோர் படை கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கட்சி கொடி அறிமுக விழாவை அவர் நடத்தினார். இதில் சத்திரிய சான்றோர் படையின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த விழா முடிவடைந்த பிறகு ஹரி நாடார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். இதுபற்றி ஹரி நாடார் கூறுகையில், ‛‛வரும் சட்டசபை தேர்தலில் நான் மீண்டும் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளேன்'' என்றார்.
இதையடுத்து பத்திரிகையாளர்கள், ‛‛கூட்டணி அமைத்து போட்டியிடுகிறீர்களா? தனித்து போட்டியிட உள்ளீர்களா?'' என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஹரி நாடார், ‛‛இந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதி. கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் நாடார் ஓட்டுகளுக்காக ஆதரவு கேட்டு கொண்டே இருக்கிறார்கள். பேச்சுவார்த்தையை தொடங்குகிறார்கள். இருந்தாலும் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. சமுதாய பெரியவர்கள், சங்க நிர்வாகிகள், முக்கிய தலைவர்களுடன் கலந்து கொண்டு எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளோம்'' என்றார்.
தற்போது ஆலங்குளம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக மனோஜ் பாண்டியன் உள்ளார். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். தற்போது ஓ பன்னீர் செல்வம் அணியில் இருக்கிறார். கடந்த முறை மனோஜ் பாண்டியன் 74,153 ஓட்டுகள் பெற்று திமுகவின் பூங்கோதை ஆலடி அருணாவை தோற்கடித்தார். பூங்கோதை 70,614 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 3,539 ஓட்டுகள் வித்தியாசத்தில் பூங்கோதை, மனோஜ் பாண்டியனிடம் தோல்வியடைந்தார்.
இவரது தோல்விக்கு முக்கிய காரணம் ஹரி நாடார் தான். ஏனென்றால் அந்த தேர்தலில் ஹரி நாடார் 3ம் இடம் பிடித்தார். ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் ஹரி நாடார் ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிட்டு 37,727 ஓட்டுகள் பெற்றார். ஆலங்குளத்தில் வேட்பாளர்களின் வெற்றியை நாடார் சமுதாய ஓட்டுகள் தான் நிர்ணயம் செய்யும். மனோஜ் பாண்டியன், பூங்கோதை, ஹரி நாடார் ஆகியோர் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில், ஹரி நாடார் ஓட்டுகளை பிரித்ததால் பூங்கோதை தோல்வியடைந்தார்.
ஆனால், கடந்த முறை ஹரி நாடாருக்கு, ராக்கெட் ராஜாவின் ஆதரவு இருந்தது. ஆனால் தற்போது ஹரி நாடார், ராக்கெட் ராஜா ஆகியோர் பிரிந்துவிட்டனர். ராக்கெட் ராஜாவும் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த முறை ஹரி நாடார் கடந்த முறையை போல் கணிசமான ஓட்டுகளை பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications