ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டி.. அசராமல் சொல்லும் டிடிவி தினகரன்
ஆர்.கே. நகர் இடைதேர்தலில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக சசிகலா தரப்பு அதிமுக வேட்பாளர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மிக பெரிய வெற்றியை பெறுவேன் என்றும் அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 6 முனை போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் தான் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் தினகரனும், தினகரனை விட கூடுதல் வாக்குகள் வெறுவேன் என்று மதுசூதனனும் சவால் விட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற பஞ்சாயத்தும் நாளை வரவுள்ளது. இந்த சூழலில் இரட்டை இலை சின்னத்திலேயே தாம் போட்டியிடுவதாக தினகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். மிக பெரிய வாக்குகள் வித்தியாசத்தை பெறுவேன். உண்மையான அதிமுக நாங்கள்தான். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் என்றார் அவர்.