ஜெ.,அத்தையின் பெயரைக் காப்பாற்ற அரசியலில் குதிக்க விரும்புகிறேன் - தீபா
சென்னை: எனது அத்தை தனது கட்சிக்காக கடுமையாக போராடியவர். பல போராட்டங்களை நடத்தியவர். அதைக் காப்பாற்ற நான் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன். அப்படி ஒரு முடிவு எடுக்க நேரிட்டால் எடுப்பேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
தீபா தந்தி டிவிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் முதல்வர் ஜெயலலிதாவுடனான தனது உறவு மற்றும் சசிகலா குடும்பத்தாரால் தானும், தனது குடும்பத்தினரும் போயஸ்கார்டன் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து விரிவாகப் பேசினார்.

பேட்டியின் இறுதியில் இது நமது அத்தையின் கட்சி, எனவே அதன் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா என்று பேட்டியாளர் ரங்கராஜ் பாண்டே கேட்டார். அதற்கு தீபா பதிலளிக்கையில், நான் அதிமுகவில் உறுப்பினர் இல்லை. ஆனாலும் அதில் ஈடுபாடு இருந்தது. அத்தை உயிருடன் இருந்தபோதே கூட நான் அதில் இணைய விரும்பினேன். ஆனால் அது முடியவில்லை.
அத்தை சிறையில் அடைக்கப்பட்டபோது கூட நான் அரசியலுக்குவர வேண்டும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். அத்தை தனது கட்சிக்காக பல போராட்டங்களை சந்தித்தவர். போராடியவர். அதற்காக பாடுபட்டவர். அதைக் காக்க வேண்டும் என்ற நிலை வந்தால், அரசியலில் நான் ஈடுபடவேண்டும் என்ற நிலை வந்தால் அந்த முடிவை எடுப்பேன் என்று கூறினார் தீபா.












Click it and Unblock the Notifications