ரூ.20 கோடி தறேன் சட்டசபை நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புங்கள்: சொல்கிறார் விஜயகாந்த்
கரூர்: சட்டசபை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி ஆகும் என்கிறார்கள். நான் அந்த பணத்தை தருகிறேன். நிகழ்வை ஒளிபரப்பச் சொல்லுங்கள். அப்போது சட்டசபைக்கு போக தயாராக உள்ளேன்! என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
ஆட்சிக்கு வரமுடியாது
அப்போது அவர், நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வாக்குகளுக்காகவே இதை அவர் அறிவித்துள்ளார். அடுத்தும் அதிமுகவே ஆட்சிக்கு வரும் என அக்கட்சியினர் நினைக்கின்றனர். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர நான் விடமாட்டேன்.
ஏன் விலகினேன்?
மக்களுக்கு நான் என்றும் துரோகம் செய்ய மாட்டேன். அதிமுக கூட்டணியில் இருந்தபோது பால் விலை, பேருந்து கட்டணம் உயர்ந்ததை தட்டிக்கேட்டேன். அதை பொறுக்காத ஜெயலலிதா, என் மீது அவதூறுகளை பரப்பினார். இதனால்தான் அந்தக் கூட்டணியில் இருந்து விலக நேரிட்டது.
திமுக, அதிமுக இருக்காது
தி.மு.க. என்று ஒரு கட்சி இருக்கக்கூடாது என அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தேன். மக்கள் தகுந்த பாடம் புகட்டினால் இரண்டு கட்சிகளுமே இல்லாமல் போய் விடும். மக்களுக்கு இலவசமாக பொருட்கள் கொடுப்பதாக ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். இலவசமாக கொடுக்கும் அனைத்தும் பொதுமக்களாகிய உங்கள் பணம். எத்தனை இலவசங்கள் அறிவித்தாலும் இனி யாரும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடமாட்டார்கள்.
சட்டசபை நேரடி ஒளிபரப்பு
மக்களுக்காக விஜயகாந்த் வாழ்ந்தான் என சரித்திரம் பேச வேண்டும். எந்த இடத்திலும் நான் யாரையும் கண்டு பயப்பட மாட்டேன். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான நானும் இல்லை. தி.மு.க.வும் இல்லை. நான் சட்டசபைக்கு போகவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அங்கு நடப்பது என்ன? ஜெயலலிதாவை புகழும் ஒரு இடமாகவே உள்ளது. அதனால்தான் சட்டசபை நிகழ்வுகளை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்கிறேன்.
ரூ. 20 கோடி தருகிறேன்
சட்டசபை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி ஆகும் என்கிறார்கள். நான் அந்த பணத்தை தருகிறேன். நிகழ்வை ஒளிபரப்பச் சொல்லுங்கள். அப்போது நான் சட்டசபைக்கு போக தயாராக உள்ளேன்.
பயப்பட மாட்டேன்
இன்னும் 6 மாதத்தில் நடக்கபோகும் தேர்தலில் நீங்கள் டெபாசிட் இழக்க போகிறீர்கள். டெபாசிட் இழக்க வைப்பது இளைஞர்களாகிய உங்களின் கடமை. என் மீது போடப்படும் வழக்குகளை பற்றி பயப்பட மாட்டேன்.
துரோகம் செய்கின்றனர்
சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 'விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை' என கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா 3 பேர் மட்டும் தற்கொலை செய்ததாக கூறுகிறார். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், நீங்கள் அனைவரும் உத்தமர்தானா?. மக்களுக்கு துரோகம் செய்யும் யாரையும் விடமாட்டேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.