திமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவேன்: மு.க. அழகிரி
சென்னை: தி.மு.க.வில் இருந்து தாம் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.
தி.முகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி, கட்சி அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்காமல் கட்சியை, கட்சித் தலைவர்களை விமர்சித்து வந்ததால் அவரை அறவே நீக்க முடிவு செய்திருப்பதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மு.க. அழகிரி, தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட போது என்னிடம் விளக்கமும் கேட்டு எந்த ஒரு நோட்டீஸும் அனுப்பப்படவில்லை.
நான் திமுக தலைமை மீது பல குற்றச்சாட்டுகளை எழுப்பியிருக்கிறேன். அதற்கு திமுக பதிலளிக்கவில்லை. எனக்கு எந்த ஒரு விளக்க நோட்டீஸும் அனுப்பாமல் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்ததால் வழக்கு தொடர இருக்கிறேன்.
நான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாலேயே கட்சியை விட்டு வெளியேறிவிடுவோம் என அர்த்தமில்லை. நானும் எனது ஆதரவாளர்களும் திமுகவில்தான் இருக்கிறோம் என்றார்.